
டைட்டில் ஸ்பான்சராக டிரீம் 11
டெல்லி : ஐபிஎல் 2020 தொடர் வரும் 19ம் தேதி முதல் யூஏஇயில் துவங்கி நடைபெறவுள்ள நிலையில், அதன் டைட்டில் ஸ்பான்சர்ஷிப் நிறுவனமான விவோ அதிலிருந்து விலகியது. இந்நிலையில் தற்போது டிரீம் 11 நிறுவனம் நான்கரை மாதங்களுக்கு 222 கோடிக்கு ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை பெற்றுள்ளது.

வர்த்தக கூட்டமைப்பு வருத்தம்
இந்த நிறுவனத்தில் சீனாவை சேர்ந்த பங்குதாரர்கள் உள்ளதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து அனைத்திந்திய வர்த்தக கூட்டமைப்பு வருத்தம் தெரிவித்துள்ளது. எல்லையில் சீன ராணுவத்தின் தாக்குதலையடுத்துசீன பொருட்களை புறக்கணிப்போம் என்ற உறுதியுடன் இந்த கூட்டமைப்பு களமிறங்கியுள்ள நிலையில், பிசிசிஐயின் இந்த புதிய முடிவு வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளது.

வேதனை அளிப்பதாக கருத்து
இதுகுறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு அந்த கூட்டமைப்பு எழுதியுள்ள கடிதத்தில் சீனாவின் டென்சண்ட் குளோபல் நிறுவனம் டிரீம் 11ன் முக்கிய பங்குதாரராக உள்ள நிலையில், தற்போது ஐபிஎல்லில் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை அந்நிறுவனத்திற்கு அளித்துள்ளது வேதனையை அளிப்பதாக தெரிவித்துள்ளது. இந்திய மக்களின் உணர்வுகளை புறக்கணிக்கும்வகையில் பிசிசிஐயின் நடவடிக்கை உள்ளதாகவும் கூறியுள்ளது.

சீன நிறுவனத்தின் பங்குதாரர்கள்
இந்திய நிறுவனமான டிரீம் 11 ஹர்ஷ் ஜெயின் மற்றும் பாவித் ஷேத் ஆகியோரால் நிறுவப்பட்டுள்ள நிலையில், அதில் சீன நிறுவனமான டென்செண்டின் பங்கு 10 சதவிகிதத்திற்கும் கீழ்தான் உள்ளதாக பிசிசிஐயின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஆண்டிற்கு 440 கோடி ரூபாய் வருமானம் தந்த விவோ நிறுவனத்தின் ஒப்பந்தம் கேன்சல் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது டிரீம் 11ன் ஒப்பந்தமும் கேள்விக்குறியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











