ஆக்லாந்து: நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பெற்ற தோல்வியால் மனது காயப்பட்டுள்ளதே தவிர, வருத்தப்படவில்லை என்று தென் ஆப்பிரிக்க கேப்டன் டி வில்லியர்ஸ் தெரிவித்தார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆக்லாந்தில் நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
நாளை சிட்னியில் நடைபெறும் இந்தியா- ஆஸ்திரேலியா போட்டியில் வெற்றிபெறும் அணியுடன் நியூசிலாந்து அணி வருகிற ஞாயிற்றுக்கிழமை மெல்போர்னில் மோதும்.

இதனிடையே நேற்றைய போட்டியின் தோல்விக்குப் பிறகு தென்ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டி வில்லியர்ஸ் கூறியதாவது:
கிரிக்கெட் வரலாற்றில் இது ஒரு சிறப்பான போட்டி. நியூசிலாந்திற்கு ஆதரவாக சுமார் 45 ஆயிரம் ரசிகர்கள் வந்திருந்தனர். என்னுடைய வாழ்நாளில் இதுபோன்ற ரசிகர் கூட்டத்தை பார்த்தது கிடையாது. ஒரு சிறந்த அணி அடுத்த நிலைக்கு செல்லும் என்று நான் யூகித்தேன். எங்களுடைய முழுத்திறமையையும் கொடுத்தோம். தோல்வியடைந்ததால் எந்த வருத்தமும் இல்லை.
அதேசமயம் நன்றாக விளையாடியும் தோல்வியடைந்து சிறு வலியை ஏற்படுத்துகிறது. இந்த சோகத்தில் இருந்து மீண்டு வர சில நாட்கள் ஆகும். தென்ஆப்பரிக்க நாட்டு மக்களுக்கான நாங்கள் விளையாடினோம். எங்களது விளையாட்டால் அவர்கள் பெருமைப் படுவார்கள் என்று நான் நம்புகிறேன்.
எங்களுக்கு ஆதரவாக பெரிய அளவில் நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார்கள். இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணிகளுக்கு வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறினார்.
அடிபட்டபிறகும் ஸ்டெடியா நிற்பதாக காட்டிக் கொண்டு கண்ணீர் சிந்தும் அசால்ட் ஆறுமுகம் கதாப்பாத்திரத்தில் படிக்காதவன் படத்தில் விவேக் நடித்திருப்பார். இன்று டி வில்லியர்ஸ் நிலைமையும் சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் மாறிப்போயுள்ளது.