கொரோனா வைரஸ் பாதிப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் 29ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்பட்டால் 5,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்பதால், இந்த ஆண்டே ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ மும்முரமாக உள்ளது.
ரத்து செய்யும் ஐசிசி முடிவு
ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் திட்டமிடப்பட்டுள்ள டி20 உலக கோப்பை தொடரை இந்த ஆண்டு நடத்துவது சாத்தியமில்லை என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதையடுத்து அந்த தொடரை அடுத்த ஆண்டு அல்லது 2022க்கு தள்ளிவைக்க ஐசிசி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அவ்வாறு அந்த தொடர் தள்ளி வைக்கப்பட்டால், அந்த காலத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
முடிவை ஒத்திவைத்த ஐசிசி
கடந்த மாதம் கூடிய ஐசிசி தலைமை நிர்வாகிகள் குழு, டி20 உலக கோப்பை குறித்து இறுதி முடிவை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவ்வாறு இல்லாமல், இந்த மாதம் 10ம் தேதிக்கு முடிவை தள்ளி வைத்தது ஐசிசி. ஆனால் 10ம் தேதி கூடிய ஐசிசி நிர்வாகிகள், டி20 உலக கோப்பை குறித்த முடிவை அடுத்த மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளனர்.
தாமதப்படுத்தினால் பிரயோஜனம் இல்லை
இந்நிலையில் டி20 உலக கோப்பை குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்காவிட்டால், அதனால் யாருக்கும் பிரயோஜனம் இல்லை என்று பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் தெரிவித்துள்ளார். டி20 உலக கோப்பை குறித்து முடிவை தாமதப்படுத்துவதால் பிசிசிஐ மிகவும் புண்பட்டுள்ளதாகஅவர் கூறியுள்ளார். ஐசிசி தனது முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் மட்டுமே பிசிசிஐ ஐபிஎல்லை நடத்துவது குறித்து முடிவெடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐசிசி விரைவில் முடிவெடுக்க வேண்டும்
தற்போதைய சூழலில் கிரிக்கெட் உலகமே ஸ்தம்பித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ள அருண் துமால், ஐசிசி டி20 உலக கோப்பை குறித்த முடிவை தாமதப்படுத்துவதால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.அனைத்து கிரிக்கெட் போர்டுகளின் நலனையும் கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தில் கூடியவிரைவில் ஐசிசி நல்ல முடிவை அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.