டெல்லி: 2025 ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய போட்டியில் மாபெரும் சூப்பர் ஓவர் சாதனை படைக்கப்பட்டது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றில் அதிக சூப்பர் ஓவர் வென்ற அணி என்ற சாதனையை படைத்துள்ளது.
இதற்கு முன் பஞ்சாப் கிங்ஸ் அணி மூன்று முறை சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றிருந்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மூன்று முறை சூப்பர் ஓவர்களில் வெற்றி பெற்றிருந்தது. தற்போது நான்காவது முறையாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இதுவரை ஐந்து சூப்பர் ஓவர்களில் விளையாடி அதில் நான்கு வெற்றிகளை பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரில் இதுவரை கோப்பை வெல்லாத டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் அதிக முறை சூப்பர் ஓவரில் வெற்றி பெற்று இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணியின் மிட்செல் ஸ்டார்க் சிறப்பாக செயல்பட்டு சூப்பர் ஓவரில் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது.
அடுத்து விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. சூப்பர் ஓவரில் பந்து வீசிய மிட்செல் ஸ்டார்க் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 11 ரன்களுக்குள் சுருக்கினார்.
அடுத்து சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்ய வந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கே எல் ராகுல் மற்றும் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் நான்காவது பந்திலேயே வெற்றியை உறுதி செய்தனர். முதல் மூன்று பந்துகளில் கே எல் ராகுல் 7 ரன்களை சேர்த்திருந்த நிலையில், நான்காவது பந்தில் ஸ்டப்ஸ் ஒரு சிக்ஸர் அடித்தார். அத்துடன் டெல்லி அணி வெற்றி பெற்றது. இரண்டு பந்துகள் மீதமிருந்த நிலையிலேயே சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது டெல்லி கேப்பிட்டல்ஸ்.