
டெல்லி அணி வெற்றி
ஐபிஎல் தொடரில் ஆரம்பத்தில் மிகவும் சிறப்பாக விளையாடிய டெல்லி கேபிடல்ஸ் அணி இடையில் சிறிது சொதப்பியது. இந்நிலையில் அந்த அணி மீண்டும் பார்மிற்கு திரும்பியுள்ளது. கடந்த முதல் தகுதிச்சுற்று போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோற்றாலும் நேற்றைய இரண்டாவது தகுதிச்சுற்றில் சன்ரைசர்ஸ் அணியை வெற்றி கொண்டுள்ளது.

மும்பை இந்தியன்சுடன் மோதுகிறது
இதன்மூலம் முதல்முறையாக ஐபிஎல்லின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது டெல்லி கேபிடல்ஸ் அணி. இதையடுத்து வரும் செவ்வாய்க்கிழமை இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதவுள்ளது.

சன்ரைசர்ஸ் தோல்வி
நேற்றைய போட்டியில் அணியின் வீரர்கள் ஷிகர் தவான், மார்கஸ் ஸ்டாய்னிஸ், காகிசோ ரபடா ஆகியோரின் சிறப்பான விளையாட்டால் அந்த அணி வெற்றியை சுவைத்துள்ளது. முதலில் களமிறங்கிய டெல்லி அணி 3 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்களை குவித்த நிலையில், அடுத்ததாக களமிறங்கிய சன்ரைசர்ஸ் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்களை மட்டுமே எடுத்து போட்டியில் தோல்வியடைந்தது.

சிறப்பான வீரர்கள் செயல்பாடு
போட்டியின் வெற்றியை அடுத்து பேசிய ஷ்ரேயாஸ் ஐயர், இந்த வெற்றி இதுவரை இல்லாத உணர்வை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அணி வீரர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக இணைந்து செயல்பட்டதாகவும் ஒவ்வொரு வீரரும் தங்களது சிறப்பான செயல்பாட்டை அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தன்னுடைய அதிர்ஷ்டம்
பயிற்சியாளர்கள் மற்றும் ஊழியர்களும் நல்ல ஒத்துழைப்பை அளித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். இதுபோன்ற மிகவும் சிறப்பான அணி தனக்கு அமைந்தது தன்னுடைய அதிர்ஷ்டம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இறுதிப்போட்டியில் சுதந்திரமாக விளையாட முற்படுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஸ்டெய்னிஸ் நல்ல துவக்கம்
மிடில் ஆர்டரில் தங்களுக்கு ரஷீத் கான் நெருக்கடியை அளிப்பார் என்பது தெரிந்திருந்ததாகவும், ஆனால் அவருக்கு விக்கெட்டுகளை கொடுககாமல் விளையாட திட்டமிட்டதாகவும் ஐயர் தெரிவித்தார். இதேபோல தங்களது அணியின் துவக்க பார்ட்னர்ஷிப் சரியாக இல்லாத நிலையில் தற்போது ஸ்டெய்னிஸ் நல்ல துவக்கத்தை தந்துள்ளதாகவும் கூறினார்.


Click it and Unblock the Notifications











