ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல்
2020 ஐபிஎல் தொடருக்காக ஐபிஎல் அணிகள் துபாய் மற்றும் அபுதாபியில் முகாமிட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சகட்டத்தில் இருக்கும் நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடரை நடத்த பிசிசிஐ முடிவு செய்ததால் அனைத்து அணிகளும் அங்கே சென்று பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
13 பேருக்கு கொரோனா
அனைத்து ஐபிஎல் அணி வீரர்கள், ஊழியர்கள், முதல் வாரம் முழுவதும் குவாரன்டைனில் தான் இருந்தனர். அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் முகாமில் மட்டும் 13 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. அதனால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லி கேபிடல்ஸ்
எனினும், அதன் பின் சிஎஸ்கே முகாமில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. சிஎஸ்கே அணி பயிற்சியையும் துவக்கி உள்ளது. இந்த நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணியில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.
உதவி பிசியோதெரபிஸ்ட்
டெல்லி கேபிடல்ஸ் அணியின் உதவி பிசியோதெரபிஸ்ட்-க்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. அவர் தற்போது துபாயில் தனிமையில் இருக்கிறார் என அணி நிர்வாகம் கூறி உள்ளது. அவரது முதல் இரண்டு பரிசோதனைகளில் தொற்று இல்லை என்றே முடிவு வந்துள்ளது.
மூன்றாவது பரிசோதனை
ஆனால், மூன்றாவது பரிசோதனையில் அவருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் இன்னும் அணி வீரர்கள் மற்றும் உதவியாளர்கள் யாரையும் சந்திக்கவில்லை என கூறப்படுகிறது. அதனால், டெல்லி கேபிடல்ஸ் அணியினர் திட்டமிட்டபடி பயிற்சி செய்து வருகின்றனர்.
14 நாட்கள்
தற்போது பாதிக்கப்பட்ட நபர் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். அதன் முடிவில் எடுக்கப்படும் இரண்டு பரிசோதனைகளில் அவருக்கு பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே அவர் மீண்டும் டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் இணையலாம்.
அச்சம்
ஒருவேளை அவர் வீரர்களில் யாரையாவது சந்தித்து இருந்தால் நிலைமை மோசமாக மாறி இருக்கும். மொத்த டெல்லி கேபிடல்ஸ் அணியும் தனிமையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கும். அது குறித்து தான் ஐபிஎல் அணிகள் இடையே அச்சம் நிலவி வருகிறது.
ஐபிஎல் அணிகள் கலக்கம்
கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து அனைத்து ஐபிஎல் அணிகளும் கலக்கத்தில் தான் உள்ளன. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி உரிமையாளர் நெஸ் வாடியா ஐபிஎல் அணிகளின் பாதுகாப்பு வளையத்திற்குள் தேவையான அளவில், குறைந்த நபர்களே இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என கூறி உள்ளார்.
ஐபிஎல் அட்டவணை
டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள தகவல் சரியாக 2020 ஐபிஎல் தொடருக்கான போட்டி அட்டவணையை பிசிசிஐ வெளியிட்ட உடன் வெளி உலகுக்கு தெரிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடர் திட்டமிட்டபடி நடக்குமா?