லக்னோ: நார்கியே, முஸ்தாஃபிகுர் ரஹ்மான் மற்றும் இங்கிடி ஆகியோர் இல்லாமல் வலிமை வாய்ந்த லக்னோ அணியின் பேட்டிங் வரிசைக்கு டெல்லி அணி சவால் அளிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
16வது ஐபிஎல் சீசன் கோலகலமாக நேற்று தொடங்கியது. இன்றைய நாளில் இரு போட்டிகள் நடக்கின்றன. முதல் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்த்து கொல்கத்தா அணி விளையாடுகிறது.

இரவு நடக்கும் முக்கியமான போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணியை எதிர்த்து டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி அணி விளையாட உள்ளது.
கடந்த ஆண்டு அறிமுகமான லக்னோ அணி, முதல் தொடரிலேயே பிளே ஆஃப் வரை முன்னேறி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. பேட்டிங், பவுலிங் என்று சமபலம் கொண்ட லக்னோ அணி, அனைத்து அணிகளையும் வீழ்த்தும் வல்லமை கொண்டது. ஏனென்றால் தொடக்க வீரர் முதல் டெத் ஓவர் வீசும் பந்துவீச்சாளர் வரை யார் என்பதில் லக்னோ அணியிடம் தெளிவான திட்டமும் வீரர்களும் உள்ளனர்.
டி காக், தீபக் ஹூடா, ஆயுஷ் படோனி, கருணால் பாண்டியா, மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், நிக்கோலஸ் பூரன், ஆவேஷ் கான், மார்க் வுட், உனாத்கட், ரவி பிஷ்னாய், ரொமரியோ ஷெபர்ட் என்று பலமான அணியாக உள்ளது. இந்த அணியின் இடதுகை பந்துவீச்சாளரான மோசின் கான் மட்டும் காயம் காரணமாக விலகியுள்ளார். ஆனால் அவருக்கு பதிலாக உனாத்கட் இருப்பதால், அந்த பிரச்சனையும் நிரப்பப்பட்டுள்ளது. அதேபோல் நிக்கோலஸ் பூரனை எப்படி பயன்படுத்தப் போகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அதேபோல் டெல்லி அணியை பொறுத்தவரை கேப்டன் ரிஷப் பண்ட் காயம் காரணமாக விலகி இருந்தாலும், டேவிட் வார்னரின் அனுபவ கேப்டன்சி இருப்பதால் எந்த பிரச்சனையும் இல்லை. அதுமட்டுமல்லாமல் வாழ்க்கையின் உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கும் ப்ரித்வி ஷா, அக்சர் படேல், மிட்செல் மார்ஷ், ரோவ்மன் பவல், ரைலி ரோசவ் என சரியான கலவையில் வீரர்கள் இருக்கிறார்கள்.

அதேபோல் பந்துவீச்சில் நார்கியே, முஸ்தாஃபிகுர் ரஹ்மான், இங்கிடி, குல்தீப் யாதவ், கலீல் அஹ்மத் மற்றும் சேத்தன் சக்காரியா ஆகியோர் இருக்கிறார்கள். ஆனால் தேசிய அணிக்கு ஆடி வருவதால் முக்கிய வெளிநாட்டு பந்துவீச்சாளர்களான நார்கியே, ரஹ்மான், இங்கிடி ஆகியோர் இந்தப் போட்டியில் பங்கேற்க முடியாத சூழல் உள்ளது. இதனால் வலிமையான லக்னோ அணிக்கு டெல்லி அணியின் அனுபவமில்லாத பந்துவீச்சு சவாலளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.