டெல்லி: காமன்வெல்த் போட்டியில் ஊக்க மருந்து உட்கொண்டு சிக்கியுள்ளார் நைஜீரிய வீரர் ஒருவர். நைஜீரியர் ஒருவர் ஊக்க மருந்து உட்கொண்டதாக சிக்கியுள்ளது கடந்த 2 நாட்களில் இது 2வது முறையாகும்.
காமன்வெல்த் போட்டியில் தடகளப் பிரிவு போட்டிகள் நடந்து வருகின்றன. பெரும்பாலும் இதில்தான் ஊக்க மருந்து உட்கொண்டு பலரும் சிக்குவது வழக்கம். அந்தவகையில் கடந்த2 நாட்களில் 2 பேர் சிக்கியுள்ளனர்.
மகளிர் 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கம் வென்ற நைஜீரிய வீராங்கனை ஒசயேமி ஒலுடமோலா நேற்றுதான் மீத்தைல்ஹெக்ஸனீமைல் என்ற தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை உட்கொண்டதாக சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஆடவருக்கான 110 மீட்டர் தடை தாண்டி ஓடு் போட்டியில் பங்கேற்ற நைஜீரிய வீரர் சாமுவேல் ஓகானும் அதே ஊக்க மருந்தை உட்கொண்டு பிடிபட்டுள்ளார்.
இதுகுறித்து காமன்வெல்த் போட்டி சம்மேளன தலைவர் மைக்கேல் பென்னல் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசுகையில், வீரர் ஓகானுக்கு ஊக்க மருந்து சோதனை பாசிட்டிவ் என்று வந்துள்ளது என்றார்.
110 மீட்டர் தடை தாண்டி ஓடும் போட்டியில் ஓகான் 6வது இடத்தைப் பிடித்தார் என்பது நினைவிருக்கலாம்.
இதற்கிடையே, வீராங்கனை ஓசயேமிக்கு பி சாம்பிள் சோதனை நடத்தப்பட்டுள்ளது.அதன் முடிவு நாளை தெரிய வரும்.
பென்னல் தொடர்ந்து கூறுகையில், இதுவரை 1200 ஊக்க மருந்து சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 2 முடிவுகள் பாசிட்டிவ் என்று வந்துள்ளது என்றார்.