
டெல்லி: ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில் விளையாடும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு, 11 சீசன்களில் 11வது கேப்டன் கிடைத்துள்ளார். இதில் கவுதம் கம்பீர் இரண்டு முறை கேப்டனாக இருந்துள்ளார்.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகின்றது. இந்த சீசனில் விளையாடும் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 6 ஆட்டங்களில் 5ல் தோல்வியடைந்துள்ளது.

தோல்விகளுக்கு பொறுப்பேற்று கேப்டன் பொறுப்பில் இருந்து கவுதம் கம்பீர் விலகினார். முந்தைய சீசன் வரை கொல்கத்தாவுக்கு விளையாடிய அவரை, இந்த ஆண்டு நடந்த ஏலத்தின்போது டெல்லி அணி தேர்ந்தெடுத்தது. கேப்டனாகவும் அறிவித்தது.
டெல்லி அணியின் கேப்டன் பதவியில் இருந்து கம்பீர் விலகியதால், ஸ்ரேயாஸ் ஐயர் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். டெல்லி அணிக்கு 11 சீசன்களில் 11 பேர் கேப்டன்களாக இருந்துள்ளனர்.

2008ல் வீரேந்திர சேவாக், 2009ல் கவுதம் கம்பீர், 2010ல் தினேஷ் கார்த்திக், 2011ல் ஜேம்ஸ் ஹோப்ஸ், 2012ல் மகேல ஜெயவர்த்தனே மற்றும் ராஸ் டெயிலர் கேப்டன்களாக இருந்தனர். 2013ல் டேவிட் வார்டன், 2014ல் கெவின் பீட்டர்சன் மற்றும் டுமினி கேப்டனாக இருந்தனர். 2016 மற்றும் 2017ல் ஜாகிர் கான் கேப்டனாக இருந்தார்.
ஒரு சீசனில் இரண்டு பேர் கேப்டனாக இருந்துள்ளது டெல்லிக்கு இது புதிதல்ல. 2012 மற்றும் 2014லிலும் இதேபோல், இரண்டு பேர் அணியின் கேப்டன்களாக இருந்துள்ளனர்.