டெல்லி: ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில் வெற்றியின் அருகில் சென்று, கடைசி பாலில் தோல்வியடைந்த டெல்லி அணி, மீண்டு வருவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. டெல்லியில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. முதலில் ஆடிய பஞ்சாப் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
கடைசி பந்தில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில், அபாரமாக விளையாடி வந்த ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்க டெல்லி தோல்வியடைந்தது. இந்த சீசனில் தனது சொந்த மண்ணில் விளையாடும் முதல் போட்டியில் தோல்வியடைந்தது டெல்லிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை கோப்பையை வெல்லாத டெல்லி அணி தான் விளையாடிய 6 போட்டிகளில் 5ல் தோல்வியடைந்துள்ளது. ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது. டெல்லி அடுத்ததாக சொந்த மண்ணில் 6 ஆட்டங்களிலும், மற்ற இடங்களில் 2 ஆட்டங்களிலும் விளையாட உள்ளது.
நேற்றைய போட்டியின் மூலம் ஐபிஎல்லில் முதல் முறையாக களமிறங்கிய இங்கிலாந்தின் லியாம் பிளங்கெட், டெல்லி அணிக்காக 3 விக்கெட்களை வீழ்த்தினார். அவருடைய அபாரமான பந்துவீச்சினால், பஞ்சாப் அணி ரன் குவிப்பது கட்டுப்படுத்தப்பட்டது. அடுத்து ஒரு வெற்றி கிடைத்தால் போதும், அணிக்கு மிகப் பெரிய தன்னம்பிக்கை கிடைத்துவிடும். அடுத்தப் போட்டியில் கண்டிப்பாக வெல்வோம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பஞ்சாபுக்கு எதிரான போட்டியில் வெற்றி கைக்கு எட்டியும் கடைசியில் பறிபோனது. ஆனால், வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையை அந்தப் போட்டி ஏற்படுத்தியுள்ளது. அடுத்தப் போட்டியில் இன்னும் வேகத்துடன் செயல்படுவோம் என்று அவர் கூறியுள்ளார்.
கேப்டனாக கொல்கத்தா அணிக்கு இரண்டு முறை கோப்பையை வென்ற தந்த கவுதம் கம்பீர், தற்போது டெல்லி அணியின் கேப்டனாக உள்ளார். டெல்லி அணி அடுத்ததாக, 27ம் தேதி கொல்கத்தாவுடன் மோத உள்ளது.