டெல்லி: 2025 டெல்லி பிரீமியர் லீக் (DPL) எலிமினேட்டர் போட்டியில் நடந்த அநாகரிகமான சண்டைகள் மற்றும் மோதல்களால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. வீரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஒருவரையொருவர் தள்ளிக்கொண்ட சம்பவங்கள் கிரிக்கெட்டின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்த நிலையில், போட்டி ஒழுங்கு நடவடிக்கைக் குழு, சம்பந்தப்பட்ட 5 வீரர்கள் மீது கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது.
இந்தப் போட்டியில் என்ன நடந்தது? எந்த ஐந்து வீரர்களுக்கு என்னென்ன தண்டனைகள் வழங்கபட்டு இருக்கின்றன? என்று பார்க்கலாம்.
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில், சவுத் டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் மற்றும் வெஸ்ட் டெல்லி லயன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இந்த முக்கியமான போட்டியில், ஆரம்பம் முதலே அனல் பறந்தது.

வெஸ்ட் டெல்லி லயன்ஸ் அணி 202 ரன்கள் என்ற இலக்கைத் துரத்தியபோது, போட்டியின் 11-வது ஓவரில் இந்த மோதல் வெடித்தது. வெஸ்ட் டெல்லி தொடக்க வீரர் கிரிஷ் யாதவ், சவுத் டெல்லி பந்துவீச்சாளர் அமன் பார்தியின் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். விக்கெட்டை வீழ்த்தியதும், அமன் பார்தி, கிரிஷ் யாதவை முறைத்துப் பார்த்து ஏதோ வார்த்தைகளைக் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த கிரிஷ், பெவிலியன் திரும்பாமல், மீண்டும் பிட்ச் அருகே வந்து பதிலுக்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
சூழ்நிலை மோசடைவதைக் கண்ட சவுத் டெல்லி வீரர் சுமித் மாத்தூர், ஆக்ரோஷமாக கிரிஷ் யாதவை நோக்கி ஓடிவந்து, விரலை நீட்டி எச்சரித்தார். இதையடுத்து, இரு அணி வீரர்களும் ஒன்று கூடி, ஒருவரையொருவர் தள்ளிச் சென்றதால், களத்தில் கைகலப்பு ஏற்படும் சூழல் உருவானது. உடனடியாகத் தலையிட்ட பெண் நடுவர் மற்றும் வெஸ்ட் டெல்லி கேப்டன் நித்திஷ் ராணா, வீரர்களைச் சமாதானப்படுத்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அந்தச் சூடு தணிவதற்குள், ஆட்டத்தில் மற்றுமொரு அசிங்கம் அரங்கேறியது. இந்த முறை, வெஸ்ட் டெல்லி கேப்டன் நித்திஷ் ராணாவுக்கும், சவுத் டெல்லி சுழற்பந்து வீச்சாளர் திக்வேஷ் ரதிக்கும் இடையே நேரடி மோதல் வெடித்தது. திக்வேஷ் ரதி பந்துவீச ஓடிவந்து, கடைசி நேரத்தில் பலமுறை பந்துவீசாமல் பின்வாங்கினார். இது பேட்டிங் முனையில் இருந்த ராணாவை எரிச்சலடையச் செய்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ரதி பந்துவீச ஓடிவந்தபோது, ராணா வேண்டுமென்றே கிரீஸை விட்டு வெளியேறினார்.
இதனால், இருவருக்கும் இடையே கடுமையான வார்த்தைப் போர் மூண்டது. இதன் உச்சகட்டமாக, திக்வேஷ் ரதியின் பந்தை ராணா ரிவர்ஸ் ஸ்வீப் மூலம் சிக்ஸருக்குப் பறக்கவிட்டார். சிக்ஸர் அடித்த பிறகும், இரு வீரர்களும் ஆக்ரோஷமாக வார்த்தைகளால் தாக்கிக்கொண்டனர். சக வீரர்களும் நடுவரும் தலையிட்டு இருவரையும் பிரித்துவிட்டனர்.
இந்தத் தொடர் மோதல்களைத் தொடர்ந்து, டெல்லி பிரீமியர் லீக் நிர்வாகம், சம்பந்தப்பட்ட 5 வீரர்கள் மீது கடுமையான அபராத நடவடிக்கையை எடுத்துள்ளது:
கிரிஷ் யாதவ் (வெஸ்ட் டெல்லி): ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தியது மற்றும் பேட்டை நீட்டி மிரட்டியதற்காக, போட்டி சம்பளத்தில் 100% அபராதம்.
திக்வேஷ் ரதி (சவுத் டெல்லி): விளையாட்டு உணர்விற்கு எதிராக நடந்துகொண்டதற்காக, 80% அபராதம்.
நித்திஷ் ராணா (வெஸ்ட் டெல்லி): ஆபாசமான சைகைகளைப் பயன்படுத்தியதற்காக, 50% அபராதம்.
சுமித் மாத்தூர் (சவுத் டெல்லி): மற்றொரு வீரரை ஆக்ரோஷமாகத் தூண்டியதற்காக, 50% அபராதம்.
அமன் பார்தி (சவுத் டெல்லி): ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக, 30% அபராதம்.
இந்த மோதல்களுக்கு மத்தியிலும், நித்திஷ் ராணா 55 பந்துகளில் 134 ரன்கள் விளாசி, தனது அணியை வெற்றி பெறச் செய்தது குறிப்பிடத்தக்கது.