டெல்லி: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா முதலில் பேட்டிங் தேர்ந்தெடுத்தது. ரஹானேவின் சதம், அஸ்வினின் அரை சதம் உதவியுடன், இந்திய அணி 334 ரன்களை குவித்தது. அடுத்து பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 121 ரன்களிலேயே சுருண்டு ஆட்டமிழந்தது. இதனால், இந்திய அணி 213 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
மொகாலியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்றது. பெங்களூரில் நடந்த 2வது டெஸ்ட் மழையால் டிரா ஆனது. நாக்பூரில் நடந்த 3வது டெஸ்டில் இந்தியா வென்றது. எனவே 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி வியாழக்கிழமையான நேற்று தொடங்கியது. டாசில் வென்ற இந்திய கேப்டன் கோஹ்லி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ராவுக்கு பதிலாக உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டார்.
தென் ஆப்பிரிக்க அணியில், பவுமா, கைல் அப்பாட் மற்றும் டேன் பியேட் சேர்க்கப்பட்டு, வன் ஜைல், ரபடா, ஹார்மர் ஆகியோர் நீக்கப்பட்டனர்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்திருந்தது. ரஹானே 89 ரன்களுடனும், அஸ்வின் 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
முரளி விஜய் 12. தவான் 33, புஜாரா 14, கோஹ்லி 44, ரோகித் ஷர்மா மற்றும் விருதிமான் சாஹா தலா 1 ரன் எடுத்து கைவிட்டாலும், ரஹானே-அஸ்வின் ஜோடி நங்கூரம் பாய்ச்சி நின்று ஆடியது. இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்க பவுலர்கள் திணறினர்.
இன்றும் முதல் செஷன் முழுக்க ஆதிக்கம் செலுத்தியது இந்த ஜோடி. ரஹானே 127 ரன்களும், அஸ்வின் 56 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி 334 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஒரு கட்டத்தில் 139 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணி, ரஹானே-அஸ்வின் ஆட்டத்தால் நல்ல ஸ்கோரை எட்டியது.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் கைல் அப்பாட் 5 விக்கெட்டுகளையும், டேன் பியேட் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து தென் ஆப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. ஆனால், இந்திய சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் வழக்கம்போல அந்த அணி சீட்டுக்கட்டு போல சரிந்தது.
அணியின் டிவில்லியர்ஸ் அதிகபட்சமாக 42 ரன்கள் எடுத்த நிலையில் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினர். முன்னணி வீரர்களான ஹசிம் ஆம்லா 3, டுமினி 1 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், டுப்ளசிஸ் டக்அவுட் ஆனார்.
இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அஸ்வின், உமேஷ் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும், இஷாந்த் ஷர்மா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சி் 213 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.