
டெல்லி -சன்ரைசர்ஸ் மோதல்
கடந்த எலிமினேட்டர் சுற்றில் ஆர்சிபியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தற்போது தகுதிச்சுற்று 2ல் டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இதேபோல ஐபிஎல் 2020 புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறிய டெல்லி கேபிடல்ஸ் அணி முதல் தகுதிச்சுற்று போட்டியில் மும்பை அணியிடம் தோற்று தற்போது இரண்டாவது தகுதிச்சுற்றில் போட்டியிடுகிறது.

தகுதிச்சுற்றின் வெற்றி அணி விளையாடும்
இன்றைக்கு நடைபெறவுள்ள இந்த இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதவுள்ள நிலையில், இதில் வெற்றிபெறும் அணி வரும் 10ம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இறுதிப்போட்டியில் பங்கேற்று விளையாடும்.

சிறப்பாக கையாள வேண்டும்
இந்நிலையில் தனிநபர்களின் செயல்பாட்டை சிறப்பாக கையாண்டால் இன்றைய 2வது தகுதிச்சுற்று போட்டியில் சன்ரைசர்ஸ் அணியை டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி கொள்ள முடியும் என்று முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

டெல்லி அணியின் வெற்றி வாய்ப்பு
சன்ரைசர்ஸ் அணியின் பார்ம், ரிதம் உள்ளிட்டவை டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைய போதுமானதாக இருந்தாலும், ஷிகர் தவான், அஸ்வின் உள்ளிட்டவர்களை சிறப்பாக பயன்படுத்தி டெல்லி அணி வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

சன்ரைசர்ஸ் அணிக்கு அச்சுறுத்தல்
இவர்கள் இருவரும் பவர்பிளே ஆட்டத்தின் போது சிறப்பாக செயல்பட்டால் டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றி உறுதிப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும் டெல்லி அணியின் பௌலிங் அட்டாக் சன்ரைசர்ஸ் அணிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஹெட்மயரை சேர்க்க வேண்டும்
மேலும் ரபடா, நார்ட்ஜே உள்ளிட்டவர்களும் டெல்லிக்கு சிறப்பான பங்களிப்பை அளிப்பார்கள் என்று தெரிவித்துள்ள ஸ்ரீகாந்த் இன்றைய போட்டியில் ஹெட்மெயரை கொண்டுவந்தால் மிடில் ஆர்டரில் அவர் சிறப்பாக செயல்படுவார் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications











