டெல்லி : டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் என்ற இடத்தில் நாட்டின் தலைசிறந்த மல்யுத்தம் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருப்பவர் பிரிஜ் புஷன் சரண்சிங்.
இவர் பாஜகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். மல்யுத்த வீராங்கனைகளை பாஜக எம்.பி சரண்சிங் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக புகார் எழுந்தது. இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்தால் அவர்கள் முதல் தகவல் அறிக்கையை கூட பதிவு செய்ய மறுக்கின்றனர்.

இந்த குற்றச்சாட்டை முன்வைத்து நாட்டில் உள்ள தலைச் சிறந்த மல்யுத்த வீரர்களான வினேஷ் போகட், பஜ்ரங் பூனியா மற்றும் சாக்ஷி மாலிக் உள்ளிட்டோ போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா,அபினவ் பிந்த்ரா உள்ளிட்ட பிரபலங்கள் மல்யுத்த வீரர்களுக்காக குரல் கொடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஒருவர் கூட இந்த போராட்டம் குறித்து வாய் திறக்கவில்லை. இதற்கு பதிலடி கொடுத்துள்ள மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், இந்தியாவில் நாம் அனைவரும் கிரிக்கெட்டை வணங்குகிறோம், கொண்டாடுகிறோம். ஆனால் இதுவரை ஒரு கிரிக்கெட் வீரர் கூட எங்களுக்காக பேசவில்லை.

எங்களுக்கு ஆதரவாக தான் பேச வேண்டும் என்று கூட நான் சொல்லவில்லை. குறைந்தபட்சம் நாங்கள் போராடுவது குறித்து நடுநிலை கருத்துக்களை ஆவது நீங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிடலாம். ஆனால் இதனை அவர்கள் செய்யவில்லை. இதை பார்க்கும் போது தான் எனக்கு உண்மையிலேயே வலிக்கிறது.

உங்களுக்கு எல்லாம் அரசியல்வாதிகளை பார்த்து பயமா என்று வினேஷ் போகட் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் கருப்பின மக்களுக்கு ஆதரவாக அமெரிக்காவில் நடந்த போராட்டத்திற்கு இங்கு உள்ள அனைத்து வீரர்களும் ஆதரவு கொடுத்தீர்களே. அதுபோன்ற ஒரு ஆதரவு கூட எங்களுக்கு நீங்கள் தர மாட்டீர்களா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார் .