மும்பை : பிசிசிஐ நடத்தும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாள் தொடர் என்றால் அது தியோதர் கோப்பை தான். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சில ஆண்டுகளாக இந்த தொடர் நடைபெறவில்லை.
இந்த நிலையில் மண்டல வாரியாக இந்தத் தொடர் நடைபெற்றது. இதில் இந்திய அணியில் உள்ள இளம் நட்சத்திர வீரர்கள் பங்கேற்று தங்களுடைய திறமையை நிரூபித்து இருக்கிறார்கள்.

ஆறு அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் மாயங் அகர்வால் தலைமையிலான தென்மண்டல அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த தொடரில் கலக்கிய ஐந்து வீரர்கள் குறித்து தான் நாம் இப்போது பார்க்க போகிறோம். ஜார்க்கண்டை சேர்ந்த 18 வயது நிறைந்த குமார் குஷ்கரா என்ற வீரர் இந்த தொடரில் 5 இன்னிங்ஸில் 225 ரன்கள் சேர்த்தார். இவர் ஏற்கனவே ரஞ்சிக்கோப்பையில் தன்னுடைய 17ஆவது வயதிலேயே 250 ரன்களை ஒரே இன்னிங்சில் அடித்து அசத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருப்பவர் தமிழக வீரர் சாய் சுதர்சன். ஐ பி எல், டி என் பி எல் மற்றும் இலங்கையில் நடைபெற்ற ஆசியக் கோப்பை எமர்ஜிங் தொடர் ஆகியவற்றில் பங்கேற்று கலக்கிய சாய் சுதர்சன் இந்த தொடரில் மூன்று இன்னிங்ஸில் மட்டும் களமிறங்கி 204 ரன்களை அடித்திருக்கிறார்.
இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் மத்திய மண்டலத்தை சேர்ந்த யாஷ் துபே, இவர் ஐந்து இன்னிங்சில் விளையாடி 293 ரன்கள் அடித்திருக்கிறார். 24 வயதான இவர் மூன்று அரை சதங்களை அடித்திருக்கிறார். இவர் ரஞ்சிக்கோப்பையிலும் தன்னுடைய திறமையை ஏற்கனவே நிரூபித்து இருக்கிறார்.
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருப்பவர் மேற்கு மண்டலத்தை சேர்ந்த ஹார்விக் தேசாய், இந்த தொடரில் 5 இன்னிங்ஸில் களமிறங்கி 31 ரன்களை குவித்துள்ளார். ஹார்விக் தேசாய் முக்கியமான ஆட்டத்தில் 92 ரன்கள் சேர்த்தார். 18 வயதான இவர் நல்ல விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக விளங்கி வருகிறார்.
இந்தப் பட்டியலில் முதலிடத்தை பிடித்தவர் ரியான் பராக் 5 போட்டிகளில் விளையாடி 354 ரன்கள் சேர்த்திருக்கிறார். இதில் இரண்டு சதங்கள் அடங்கும். இறுதிப்போட்டியில் கூட ரியான் பராக் அபாரமாக நின்று 95 ரன்கள் சேர்த்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஏற்கனவே இடம் பெற்றுள்ள இவர் பந்துவீச்சிலும் இந்த தொடரில் 11 விக்கெட்டுகளை சாய்த்து இருக்கிறார்.