IND vs SL: சாய் சுதர்சன் இடத்தை காலி செய்த தேவ்தத் படிக்கல்.. முதல் டெஸ்ட் சதம்.. 24 வருட ரெக்கார்டு
காலே: இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்த இந்திய வீரர் தேவ்தத் படிக்கல் தனது முதல் சர்வதேச சதத்தை விளாசி அசத்தினார். இந்தப் தொடரில் காயம் காரணமாக சாய் சுதர்சன் விலகிய நிலையில், அந்த வாய்ப்பை பயன்படுத்தி அபார சதம் அடித்து இருக்கிறார் தேவ்தத் படிக்கல். இதன் மூலம், இந்திய டெஸ்ட் அணியின் 3வது இடத்தை தேவ்தத் படிக்கல் தனதாக்கிக் கொண்டாரா என்ற விவாதம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இலங்கைக்கு எதிராக டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 32 ரன்களில் ரன் அவுட்டானார். பின்னர் 3வது வரிசையில் களமிறங்கிய தேவ்தத் படிக்கல், கே எல் ராகுலுடன் இணைந்து விரைவாக ரன் சேர்த்தார். இலங்கை பந்துவீச்சை திறம்பட சமாளித்த படிக்கல் 134 பந்துகளில் தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். இவரது சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 200 ரன்களை கடந்து வலுவான ஸ்கோரை எட்டியது.

இந்திய டெஸ்ட் அணியில் 3வது வரிசை பேட்ஸ்மேன் நீண்ட நாட்களாகவே சரியாக அமையாமல் இருந்து வந்தது. கடந்த 2024ல் சென்னையில் வங்கதேசத்திற்கு எதிராக சுப்மன் கில் சதம் அடித்து இருந்தார். அதன்பின், கடந்த 19 இன்னிங்ஸ்களில் 7 வெவ்வேறு வீரர்கள் 3வது வரிசையில் களமிறக்கப்பட்டனர். அவர்களின் ஒட்டுமொத்த சராசரி வெறும் 27.28 ஆக மட்டுமே இருந்தது. மேலும் 5 முறை மட்டுமே 50 ரன்களை தாண்ட முடிந்தது. கடைசியாக சாய் சுதர்சன் ஆடி வந்த நிலையில், காயம் காரணமாக கடைசி நேரத்தில் அவர் விலகினார். அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய படிக்கல் சதம் அடித்து அசத்தினார்.
இந்த சதத்தின் மூலம் தேவ்தத் படிக்கல் மற்றொரு வரலாற்று சாதனையும் படைத்துள்ளார். இந்திய டெஸ்ட் வரலாற்றில் 3வது வரிசையில் களமிறங்கி சதம் அடித்த 2வது இடதுகை வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். கடந்த 2002 ஆம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக சவுரவ் கங்குலி 136 ரன்கள் குவித்திருந்தார். அவருக்குப் பிறகு 24 ஆண்டுகள் கழித்து 3வது வரிசையில் சதம் அடித்த இடதுகை இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை தேவ்தத் படிக்கல் நிகழ்த்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications
