சென்னை: சிஎஸ்கே அணிக்காக ஆடி வரும் சீனியர் வீரரான அஸ்வின் 2வது முறையாக சென்னை அணியின் ரகசியம் ஒன்றை தனது யூட்யூப் சேனலில் பகிர்ந்து பஞ்சாயத்தை கூட்டி இருக்கிறார். இதன் காரணமாக சிஎஸ்கே அணி விளக்கம் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதோடு, அஸ்வினுக்கு வாய் பூட்டு போடவும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
கடந்த ஐபிஎல் தொடர் பாதி சீசன் முடிவடைந்த நிலையில், சிஎஸ்கே அணி அவசர அவசரமாக டிவால்ட் பிரெவிஸை ரூ.2.2 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. வேகப்பந்துவீச்சாளர் குர்ஜப்னீத் சிங் காயம் காரணமாக விலகியதால், டிவால்ட் பிரெவிஸை விதிகளுக்கு உட்பட்டு ஒப்பந்தம் செய்தது. தற்போது டிவால்ட் பிரெவிஸ் உச்சக்கட்ட ஃபார்மில் அதிரடியாக ஆடி வருகிறார்.

இந்த நிலையில் டிவால்ட் பிரெவிஸ் ஒப்பந்தம் தொடர்பாக அஸ்வின் தனது யூட்யூப் சேனலில் பேசுகையில், டிவால்ட் பிரெவிஸை இன்னும் சில அணிகளும் ஒப்பந்தம் செய்ய முயற்சித்தன. சிஎஸ்கே அணி விதிகளுக்கு உட்பட்டு கேம் டைம் மற்றும் மாற்று வீரருக்கான தொகையை விட கூடுதல் தொகை அளிப்போம் என்று கூறி ஒப்பந்தம் செய்தது என்று கூறி இருந்தார்.
ஐபிஎல் விதிமுறைகளின் படி ஐபிஎல் ஏலத்தில் என்ன தொகைக்கு வாங்கப்படுகிறாரோ, அந்த தொகையை மட்டுமே அளிக்க வேண்டும். அதனை விடுத்து கூடுதல் தொகையை மறைமுகமாக கொடுப்பது விதிமீறலாகும். இதனால் சிஎஸ்கே அணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் விமர்சித்து வந்தனர். இது சோசியல் மீடியாவில் சர்ச்சையானது.
இந்த நிலையில் டிவால்ட் பிரெவிஸை ஒப்பந்தம் செய்ததில் சிஎஸ்கே அணி எந்த விதிமீறலிலும் ஈடுபடவில்லை. குர்ஜப்னீத் சிங்கிற்கு அளிக்கப்பட்ட அதே தொகை தான் டிவால்ட் பிரெவிஸ்-க்கு அளிக்கப்பட்டது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக அஸ்வின் சிஎஸ்கே அணி மாற்றி மாற்றி பிரச்சனையை உருவாக்கி வருகிறார்.
ஏற்கனவே ஐபிஎல் தொடரின் போது அஸ்வினின் சேனலில் பேசிய வித்யுத், சிஎஸ்கே அணியின் ஸ்கவுட்டிங் குழுவில் நானும் இருக்கிறேன். பிரியன்ஷ் ஆர்யா, அஷுதோஷ் சர்மா உள்ளிட்ட வீரர்களை நாங்கள் பரிந்துரை செய்தோம். ஆனால் சிஎஸ்கே நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என்று கூறிவிட்டார். இதனால் ரசிகர்கள் சிஎஸ்கே அணி விளாசி தள்ளினர்.
இதன்பின் அஸ்வின் தனது யூட்யூப் சேனலில் சிஎஸ்கே அணி தொடர்பாக பேச மாட்டேன் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். தற்போது மீண்டும் 2வது முறையாக அஸ்வினின் யூட்யூப் சேனல் மூலமாக சென்னை அணி நிர்வாகத்திற்கு சிக்கல் வந்துள்ளது. இதனால் சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் டென்ஷனாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.