டர்பன்: தென் ஆப்பிரிக்காவின் இளம் வீரரும், சிஎஸ்கே நட்சத்திரமான டெவால்ட் பிரவீஸ், , வெளிப்புற சத்தங்கள் எப்போதும் இருக்கும் என்றும், அவை தன்னை பாதிப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளார். தற்போது SA20 தொடரில் பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வரும் பிரவீஸ், 2026 டி20 உலகக் கோப்பையின் போது தனது ஆட்டத்தை ரசிக்க விரும்புவதாகவும் கூறினார். இந்த உலகக் கோப்பை பிப்ரவரி 7 அன்று தொடங்குகிறது.
இது குறித்து பேசிய அவர், "நீங்கள் SA20 போட்டியிலோ அல்லது உலகக் கோப்பையிலோ விளையாடினாலும் சரி, எப்போதும் வெளிப்புறச் சத்தம் இருக்கும். அது ஒரு கிரிக்கெட் போட்டியாகவே இருக்கும். எந்த விதமான போட்டியாக இருந்தாலும், நான் அதை ரசித்து, நான் எப்போதும் விளையாடுவது போல விளையாடப் போகிறேன். இந்த வெளிப்புறச் சத்தம் என்னை ஒருபோதும் பாதிப்பதில்லை," என்றார்.

"எல்லோரும் சிறப்பாகப் பயிற்சி செய்து, தங்கள் ஃபார்மை வளர்த்து வருவது அருமை, உற்சாகமாக இருக்கிறது. ஆனால் நாங்கள் இப்போது SA20-இல் கவனம் செலுத்துகிறோம், இங்கு மகிழ்ச்சியாக இருக்கிறோம். டி20 உலகக் கோப்பை நெருங்கி வருவதால் இது மிகவும் உற்சாகமானது," என்று தெரிவித்தார்.
பிரவீஸ் ஆட்டம் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கிப்ஸ் விமர்சித்த நிலையில், அதற்கு பதிலடி தரும் விதமாக பேசியுள்ளார். 22 வயதான டெவால்ட் பிரவீஸ், 2023 ஆகஸ்ட் மாதம் டர்பனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது முதல் டி20ஐ போட்டியில் அறிமுகமானார். அன்று முதல், அவர் 19 போட்டிகளில் விளையாடி, 173.70 என்ற அற்புதமான ஸ்ட்ரைக் ரேட்டில் 469 ரன்களைக் குவித்துள்ளார். அவரது டி20ஐ பயணத்தில் ஒரு சதம் மற்றும் ஒரு அரை சதமும் அடங்கும்.
இதற்கிடையில், பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணியின் கேப்டன் கேசவ் மஹராஜ், 2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பைக்கான தனது அணுகுமுறையை வெளியிட்டார். இந்தியா மற்றும் இலங்கையில் பிப்ரவரி 7 அன்று தொடங்கும் இந்த உலகக் கோப்பைக்கு தென் ஆப்பிரிக்காவின் 15 பேர் கொண்ட அணியில் இடம்பிடித்துள்ளார் இடது கை சுழற்பந்து வீச்சாளர் மஹராஜ். தென் ஆப்பிரிக்காவின் சுழற்பந்துத் தாக்குதலுக்கு இவரே தலைமை தாங்குவார்.
2021-இல் கொழும்பில் இலங்கைக்கு எதிராக டி20ஐ அறிமுகமான 35 வயதான மஹராஜ், 40 போட்டிகளில் விளையாடி 26.50 சராசரியில் 38 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். தற்போது SA20 லீக்கில் பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணியை வழிநடத்தி வருகிறார். புதன்கிழமை டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு எதிரான 15 ரன் வெற்றிக்குப் பிறகு, உலகக் கோப்பையைப் பற்றி அதிகம் யோசிக்கவில்லை என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
"இப்போது வெகுதூரம் சிந்திக்க விரும்பவில்லை. ஆனால், இது எங்களுக்குப் போட்டி அனுபவத்தைப் பெற ஒரு சிறந்த வாய்ப்பு. இந்தியாவில் நாங்கள் ஒரே ஒரு தொடரில்தான் விளையாடியுள்ளோம். எனவே, உலகக் கோப்பைக்குத் தயாராவதற்கு இது ஒரு அற்புதமான வாய்ப்பு. டி20 கிரிக்கெட்டில் சில சமயங்களில் ரன்கள் வாரி வழங்குவோம், சில சமயங்களில் விக்கெட்டுகளை எடுப்போம், சில சமயங்களில் சிக்கனமாகப் பந்துவீசுவோம். உங்கள் செயல்முறைகளை நம்பி கடினமாக உழைக்க வேண்டும். சில சமயங்களில் அதிர்ஷ்டம் கைகொடுக்கும், சில சமயங்களில் இல்லை. துரதிர்ஷ்டவசமாக, அதுதான் வாழ்க்கை, ஆனால் நான் எப்போதும் நேர்மறையான மனநிலையில் இருந்தேன்," என்று கேசவ் மகராஜ் கூறினார்.