மும்பை: யுஸ்வேந்திர சாஹல் உடனான விவாகரத்து தீர்ப்பு அளிக்கப்பட்ட போது, எமோஷனை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் கண்ணீரில் கலங்கிவிட்டேன் என்று தனஸ்ரீ வர்மா தெரிவித்துள்ளார். சாஹலுக்காக பல்வேறு தருணங்களிலும் உடன் நின்றுள்ளதாக கூறிய தனஸ்ரீ வர்மா, விவாகரத்து தீர்ப்பு வந்த போது என்ன செய்வதென புரியாமல் கலங்கி நின்றதாக கூறியுள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் தனஸ்ரீ வர்மா இணை சில மாதங்களுக்கு முன்பாக விவாகரத்து பெற்றது. 2020ஆம் ஆண்டு இருவரும் காதலித்து நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்ட நிலையில், அடுத்த சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதன்பின் 18 மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இறுதியாக மார்ச் மாதம் இருவருக்கும் மும்பை நீதிமன்றம் விவாகரத்து கொடுத்தது. அப்போது யுஸ்வேந்திர சாஹல் அணிந்திருந்த ஒரு டீ-ஷர்ட் சர்ச்சையானது. Be your own Sugar Daddy என்ற வாசகம் இடம்பெற்றிருந்த டீ-ஷர்ட்டை சாஹல் அணிந்திருந்தார். இது மறைமுகமாக தனஸ்ரீ வர்மாவை விமர்சிப்பதை போல் அமைந்தது.
இந்த நிலையில் விவாகரத்து தொடர்பாக முதல்முறையாக தனஸ்ரீ வர்மா மனம் திறந்துள்ளார். அதில் தனஸ்ரீ வர்மா பேசுகையில், மக்கள் நிச்சயம் என்னை தான் விமர்சிக்கப் போகிறார்கள் என்பதை நன்றாக அறிந்திருந்தேன். அப்போது சாஹல் அணிந்திருந்த டீ-ஷர்ட் பற்றிய சிந்தனை கூட எனக்கு தெரியவில்லை. இப்படியொரு டீ-ஷர்ட் அணிந்ததற்கு பதிலாக சாஹல் எனக்கு நேரடியாக வாட்ஸ் அப்பில் ஒரு மெசேஜ் அனுப்பி இருக்கலாம் என்றே தோன்றியது.
விவாகரத்து தீர்ப்புக்காக நான் தயாராகியே நீதிமன்றத்திற்கு வந்தேன். ஆனாலும் அந்த நேரத்தில் என்னால் எமோஷனை கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரு கட்டத்தில் அனைவருக்கும் முன்பாகவே அழுக தொடங்கிவிட்டேன். அந்த நேரத்தில் என்ன செய்வதென தெரியவில்லை. ஆனால் சாஹல் தான் அங்கிருந்து வெளியேறிய முதல் நபர். தீர்ப்பு வந்த சில நொடிகளிலேயே வெளியில் சென்றுவிட்டார்.
அதேபோல் என்னுடைய பார்ட்னருக்காக ஒவ்வொரு தருணத்திலும் நின்றிருக்கிறேன். சிறிய விஷயம், பெரிய விஷயம் என்று இல்லாமல், அனைத்து விவகாரங்களிலும் உடன் நின்றுள்ளேன். அதனால் விவாகரத்து முடிவு வந்த போது எமோஷனலாக இருந்தது. அந்த நாளில் நாம் எப்படி செயல்படுகிறோம் என்பதை பொறுத்தே நாம் மனிதராக எப்படி நடந்திருக்கிறோம் என்பது தெரியும் என்று தெரிவித்துள்ளார்.