மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் அவரது மனைவி தனஸ்ரீ வர்மா பிரியப் போவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதனை அடுத்து ரசிகர்கள் பலரும் தனஸ்ரீ வர்மாவை கடுமையாக கேலி செய்தும், கிண்டல் செய்தும், திட்டியும் வந்தனர். கிரிக்கெட் வீரர்களை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து செய்வதன் பின்னணி குறித்து சில தவறான பதிவுகளையும் வெளியிட்டு இருந்தனர்.
மேலும், நடனக் கலைஞரான தனஸ்ரீ வர்மா பல ஆண்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து அவரை கடுமையாக விமர்சித்தும் இருந்தனர். இந்த நிலையில், தனஸ்ரீ வர்மா அதை கண்டித்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் தன்னையும், தனது குடும்பத்தினரையும் ரசிகர்கள் காயப்படுத்தி வருவதாகவும், எந்த விதமான ஆதாரமும் இன்றி தனது குண நலன்களை படுகொலை செய்யும் வகையில் தவறான சித்தரிப்புகளை செய்து வெறுப்பை பரப்பி வருவதாகவும் கூறி இருக்கிறார்.

இது பற்றி தனஸ்ரீ வர்மா வெளியிட்டு இருக்கும் பதிவு - "கடந்த சில நாட்கள் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் மிகவும் கடினமாக இருந்தது. எங்களை உண்மையில் மனமுடைய செய்தது என்னவெனில், ஆதாரம் அற்ற எழுத்துக்கள், உண்மை என்ன என்பதை அறியாமல் வெளியிடப்பட்ட கருத்துக்கள் மற்றும் எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், எனது குணங்களை படுகொலை செய்யும் வகையில் வெளியான தவறான சித்தரிப்புகள், முகம் தெரியாத நபர்கள் கேலி செய்து வெறுப்பை பரப்பியது தான் காரணம்."
"எனக்கென ஒரு பெயரை பெறுவதற்கும், நன்மதிப்பை பெறுவதற்கும் பல ஆண்டுகள் கடினமாக உழைத்து இருக்கிறேன். நான் அமைதியாக இருப்பது எனது பலவீனத்துக்கான அறிகுறி அல்ல. அது எனது பலத்திற்கான அறிகுறி. இணையதளத்தில் என்னை குறித்து எதிர்மறையான செய்திகளை பரப்பினாலும், அதிலிருந்து மீள்வதற்கு தைரியமும். தன்னம்பிக்கையும் தேவை."
"நான் உண்மை எதுவோ அதில் எனது கவனத்தை செலுத்தி முன்னேறிச் செல்ல விரும்புகிறேன். எனது நன்மதிப்புகளை தொடர்ந்து பற்றி இருக்க விரும்புகிறேன். உண்மை எப்போதும் உயர்ந்து நிற்கும். ஓம் நமச்சிவாய." எனக் குறிப்பிட்டு இருக்கிறார் தனஸ்ரீ வர்மா.