முன்னாள் ஹாக்கி வீரர் ஷாஹிதின் சிகிச்சைக்கு நிதி உதவி அளித்த மோடிக்கு நன்றி - தன்ராஜ் பிள்ளை
டெல்லி: மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் முன்னாள் ஹாக்கி வீரர் முஹம்மது ஷாஹிதின், சிகிச்சை செலவுக்கு உடனடியாக பத்து லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்க உதவிய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் தன்ராஜ் பிள்ளை தெரிவித்துள்ளார்.
1980 ஆம் ஆண்டு மாஸ்கோ நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் ஹாக்கி வீரரான முஹம்மது ஷாஹித் பங்கேற்ற இந்திய அணி தங்கப்பதக்கத்தை வென்றது.

பின்னர் இவர் இடம்பெற்ற இந்திய அணி 1982 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும், 1986 ல் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் இவரது தலைமையின் கீழான அணி வெண்கலப் பதக்கத்தையும் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தது. தற்போது 56 வயதாகும் ஷாஹித் மஞ்சள் காமாலை மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குர்கானில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவரது மருத்துவ செலவுக்கு உதவுமாறு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கு முன்னாள் ஹாக்கி வீரரான தன்ராஜ் பிள்ளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முஹம்மது ஷாஹித்தின் சிகிச்சை செலவுக்கு உடனடியாக பத்து லட்சம் ரூபாய் வழங்கப்படும் என மத்திய விளையாட்டு துறை அமைச்சர் ஜிதேந்திரா சிங் அறிவித்தார். மேலும் உத்தரப்பிரதேச அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து முஹம்மது ஷாஹிதின், சிகிச்சை செலவுக்கு உடனடியாக உதவிய பிரதமர் மோடி, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ஜிதேந்திரா சிங், ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகியோர்களுக்கு நன்றி தெரிவித்து முன்னாள் ஹாக்கி வீரர் தன்ராஜ் பிள்ளை கடிதம் எழுதியுள்ளார்.


Click it and Unblock the Notifications