மும்பை: தரம்சலா, ராஞ்சி உள்பட 6 புதிய மைதானங்களில் டெஸ்ட் போட்டிகளை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. ஆனால் இங்கெல்லாம் டெஸ்ட் போட்டிகள் சரிப்பட்டு வருமா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.
மேலும் குப்பையான பிட்ச்சைப் போட்டு டெஸ்ட் போட்டிகளை நடத்தி இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம் ஆகிய அணிகளை வரவைத்து தோற்கடித்து கோஹ்லி தலைமையிலான டெஸ்ட் அணி பெஸ்ட் என்று காட்ட முயற்சியா என்ற சந்தேகத்தையும் ரசிகர்கள் எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.
முன்பு நாக்பூரில் போட்டது போன்ற சொதப்பான பிட்ச்சைப் போடவும் முயற்சிகள் நடக்கலாம் என்ற ஐயமும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

தர்மசலாவில் ஒரு நாள் போட்டிகள், டி20 போட்டிகள் நடந்துள்ளன. ஆனால் டெஸ்ட் போட்டி இப்போதுதான் முதல் முறையாக நடக்கப் போகிறது. அதேபோல டோணியின் சொந்த ஊரான ராஞ்சி, விசாகப்பட்டனம், ராஜ்கோட், இந்தூர், புனே ஆகிய நகரங்களிலும் இதுவரை டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றதில்லை.
கடந்த ஆண்டுதான் இவை டெஸ்ட் மைதானங்களாக தரம் உயர்த்தப்பட்டன. இப்போதுதான் முதல் முறையாக இங்கு டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இருப்பினும் பிசிசிஐ விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் திருப்திகரமாக இருந்தால் மட்டுமே இங்கு போட்டிகள் நடத்தப்படும் என்றும் பிசிசிஐ கூறியுள்ளது.
கோஹ்லியை அனைத்து வகை கிரிக்கெட்டும் கேப்டனாக்க வேண்டும் என்று குரல்கள் ஒலித்து வருகின்றன. இந்த நிலையில் புதிய டெஸ்ட் மைாதனங்களை பிசிசிஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் பின்னணி என்ன என்று தெரியவில்லை. ஆனால், என்னமோ நடக்கப் போகுதுன்னு மட்டும் நல்லா புரியுது...!