தரம்சாலா: இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் நாளைய ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை எதிர்த்து வங்கதேச அணி விளையாடவுள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் இங்கிலாந்து அணி மோசமான தோல்வியை சந்தித்தது. அதேபோல் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் அணி வெற்றிபெற்றுள்ளது.
இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியை விடவும் தரம்சாலா மைதானம் பற்றி பேச்சுகள் தான் அதிகமாக உள்ளது. ஏனென்றால் தரம்சாலா மைதானத்தின் அவுட் ஃபீல்டு அவ்வளவு மோசமாக உள்ளது. வங்கதேசம் - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது முஜீப் உர் ரஹ்மான் காயமடையும் சூழல் ஏற்பட்டது.

அதேபோல் பயிற்சி போட்டியின் போது நியூசிலாந்து அணியின் கான்வேயும் காயமடையும் நிலை ஏற்பட்டது. மைதானத்தில் ஃபீல்டர்கள் ஃபீல்டிங் செய்யும் பகுதிகளில் புற்கள் குறைவாக இருந்ததே இதற்கு காரணம். மைதானத்தின் பல்வேறு பகுதிகளிலும் புற்கள் குறைவாக உள்ளது. இதுகுறித்து ஏற்கனவே ஆஃப்கானிஸ்தான் பயிற்சியாளர் ஜானத்தன் ட்ராட் விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், என்னை பொறுத்தவரை தரம்சாலா மைதானம் மோசமாக உள்ளது. ஃபீல்டிங்கின் போது ஒவ்வொரு வீரரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு அணியாக இருக்க என்ன தேவையோ, அதற்கு எதிரானதாக மைதானத்தின் தன்மை உள்ளது. ஃபீல்டிங்கின் போது ரன்கள் எடுப்பதை தடுக்க டைவ் அடிப்பது அவசியம். ஆனால் அவுட் ஃபீல்டு காரணமாக டைவ் அடிக்க யோசிக்க வேண்டிய நிலை உள்ளது.
ஐபிஎல் தொடரின் போது நாங்கள் இதே ஆடுகளத்தில் ஆடியிருக்கிறோம். அப்போது இந்த மைதானம் அப்படியல்ல. இந்த மைதானத்தில் விளையாடுவதால் எந்த நேரத்திலும் யாருக்கு வேண்டுமானாலும் காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. நாட்டிற்காக உச்சக்கட்ட கிரிக்கெட்டில் விளையாடும் போது, இதுபோன்ற சூழல்களில் விளையாடுவோம் என்று எதிர்பார்க்கவில்லை. ஒவ்வொரு முறையும் ரன்களை தடுக்க வீரர்கள் தீவிரமாக முயற்சிப்பார்கள்.
இந்த மைதானம் எப்படி இருக்க வேண்டுமோ அந்த அளவிற்கு நன்றாக இல்லை. அதேபோல் இரு அணிகளுமே ஒரே மைதானத்தில் தான் விளையாடுகிறோம். பிட்சை பொறுத்தவரை மிகச்சிறப்பாக உள்ளது. நிச்சயம் வெற்றிக்கான பசியுடன் இருக்கிறோம். மைதானத்தின் அவுட் ஃபீல்டு மோசமாக இருப்பதை தோல்விக்கான காரணமாக கூறப்போவதில்லை. கொஞ்சம் புத்திசாலிதனமாக விளையாட வேண்டும் என்று கூறியுள்ளார்.