கேன்பரா: தவானின் இழப்பு, இந்திய அணிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று ஆஸ்திரேலிய அணி முன்னாள் வீரர் மைக்கேல் ஹசி கூறியிருக்கிறார்.
உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தொடக்க வீலர் ஷிகர் தவானுக்கு இடது கை பெருவிரல் பகுதியில் காயம் ஏற்பட்டது. அதனால் சில போட்டிகளில் அவர் விளையாடாமல் இருந்தார்.

அவருக்கு பதிலாக ரிஷப் பன்ட் இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனாலும் தவான் காயம் குணமடைந்து நிச்சயம் விளையாடுவார் என்று கோலி தெரிவித்தார். அதனால் தவானுக்கு பதில் ராகுல் துவக்க வீரராகவும் விஜய் சங்கர் 4மிடில் ஆர்டரிலும் சேர்க்கப் பட்டனர்.
இந்நிலையில் தவானின் காயம் குணமுடைய கூடுதல் நாட்கள் பிடிக்கும் என்பதால் உலக கோப்பை தொடரில் இருந்த அவர் விலக்கப்பட்டு உள்ளார் என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில் தவானின் நீக்கம் குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் ஹசி பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது: தவானுக்கு ஏற்பட்ட காயம் தற்செயலானது. அதன் தாக்கம் அதிகரித்ததால் அவர் இந்த தொடரில் இருந்து வெளியேற்றப் பட்டார்.
தவான் இருந்திருந்தால் இந்தியாவின் ஓபனிங் மிக சிறப்பாக அமைந்திருக்கும். அவர் தற்போது இல்லாததால், இந்திய அணிக்கு பெரிய பாதிப்பு இல்லை என்றே நான் கருதுகிறேன். ஏனெனில் தவானுக்கு பதிலாக விளையாடும் ராகுல் துவக்க வீரராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர். எனவே ரோகித் சர்மாவுடன் ராகுல் ஆடுவது எந்த விதத்திலும் பாதிக்காது. மேலும் மிடில் ஆர்டரில் கோலி, தோனி மற்றும் பாண்டியா ஆகியோர் சிறப்பாக ஆடி வருகின்றனர். இதனால் இந்திய அணிக்கு பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படாது என்று கூறினார்.