ஐபிஎல் குறித்து ஜோஸ் பட்லர்
இங்கிலாந்து விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் தன்னுடைய ஐபிஎல் பயணத்தை மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து துவங்கினார். தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் சீசன் காலவரையன்றி தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.
கிரிக்கெட் குறித்து பேட்டி
கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச அளவில் வீரர்கள் அனைவரும் தங்களது வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், லைவ் சாட் மூலம் பேட்டிகளை அளித்து வருகின்றனர். இதேபோல, லான்கேஷயர் கிரிக்கெட்டிற்காக முன்னாள் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் வாரன் ஹெக்கிற்கு பேட்டியளித்த பட்லர், ஐபிஎல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
ஜோஸ் பட்லர் பெருமிதம்
இதனிடையே, முன்னாள் இந்திய கேப்டன் எம்எஸ் தோனியிடம் ஐபிஎல் போட்டிகளின்போது நிறைய விஷயங்களை கற்க முடியும் என்று பட்லர் கூறியுள்ளார். மைதானத்தில் நெருக்கடி நேரங்களையும் எவ்வாறு கூலாக அவர் சமாளிக்கிறார் என்பது மிகவும் வியப்பான விஷயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விஷயத்தில் அவர் மற்றவர்களுக்க மிகச்சிறந்த உதாரணம் என்றும் கூறியுள்ளார்.
ஐபிஎல் கற்று கொடுத்த பாடம்
ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதன்மூலம் நெருக்கடிகளை சமாளிக்கும் திறன் தனக்கு ஏற்பட்டுள்ளதாகவும் பட்லர் கூறியுள்ளார். ஐபிஎல்லில் விளையாடும் வெளிநாட்டு வீரர்கள் நால்வரில் ஒருவராகவும், உள்ளூர் வீரர்களுக்கு இடையிலும் விளையாடுவது கண்டிப்பாக நெருக்கடியை தரும் என்றும் அதை அமைதியாக சமாளிக்க வேண்டிவரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வித்தியாசமான அனுபவத்தை தரும்
காலி மைதானங்களில் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது குறித்து பேசிய பட்லர், அது வித்தியாசமான அனுபவத்தை தரும் என்று கூறியுள்ளார். இந்த நெருக்கடி சூழலில் இவ்வாறு போட்டிகளை நடத்துவது நம்பிக்கையை ஏற்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யாரும் பார்க்காவிட்டாலும் போட்டிகளை விளையாட முடியும் ஏனென்றால், நாம் கிரிக்கெட்டைநேசிக்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.