மும்பை: கிரிக்கெட்டை கடந்து முன்னாள் கேப்டன் தோனியுடன் நெருங்கிய நட்பு என்று தனக்கு எதுவும் இல்லை என இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தவர் யுவராஜ் சிங். அந்த உலகக்கோப்பை தொடரில் பேட்டிங், பவுலிங் இரண்டிலும் மிரட்டி தொடர் நாயகன் விருதை தட்டி சென்றார். அதன்பின் கேன்சர் பாதிப்பு காரணமாக இந்திய அணியில் இருந்து விலகிய நிலையில், சில தொடர்களில் மட்டும் கம்பேக் கொடுத்தார். இதையடுத்து ஓய்வுபெற்ற யுவ்ராஜ் சிங், குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தோனி உடனான நட்பு குறித்து யுவராஜ் சிங் பேசியுள்ள கருத்துகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள யுவராஜ் சிங், இந்திய அணியில் தோனி கேப்டனாக இருந்த நான் துணை கேப்டனாக இருந்தேன். அப்படி இருக்கும் போது முடிவு எடுப்பதில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சில நேரங்களில் அவர் எடுத்த முடிவுகள் எனக்கு பிடிக்காது. அதேபோல் நான் எடுத்த முடிவுகளில் அவருக்கு உடன்பாடு இருந்ததில்லை. இது ஒவ்வொரு அணியிலும் இருப்பது தான்.
எனது கிரிக்கெட்டின் கடைசி காலத்தில், தோனியிடம் ஒருமுறை ஆலோசனை கோரினேன். அப்போது தோனி தான், தேர்வு குழுவினர் எதிர்பார்ப்பது என்னிடம் இல்லை என்று கூறினார். தோனி கூறிய போதுதான், இப்போதாவது எனக்கு இது தெரிய வந்ததே என்று நினைத்தேன். இந்த பேச்சுகள், 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கு முன்பு தான் நடந்தது. அதேபோல் ஒரு அணியில் விளையாடினால் நண்பர்களாக இருக்க வேண்டும் என்பதல்ல. சில வீரர்களுக்கு சிலருடன் இருக்க மட்டுமே பிடிக்கும். இது அனைத்து அணிகளிலும் இருப்பதுதான்.
எங்கள் இருவரின் வாழ்க்கையும் வெவ்வேறு வகையிலானது. ஆனால் மைதானத்தில் களமிறங்கிவிட்டால் அனைத்து ஈடோவையும் பின் தள்ளி வைத்துவிட்டு ஒன்றாக இணைந்து விளையாட வேண்டும். தோனி 3 முறை களத்தில் காயமடைந்த போது, அவருக்கு பை-ரன்னராக நான் ஓடி இருக்கிறேன். ஒரு முறை தோனி 90 ரன்களில் இருந்த போது அவர் சதம் விளாச வேண்டும் என்று ஸ்ட்ரைக்கை அவருக்கு கொடுத்தேன். அவர் அரைசதம் விளாச 2வது ரன்னுக்கு ஓடும் போது, நான் டைவ் அடித்து ரன்கள் சேர்த்துள்ளார். அதேபோல் 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை நெதர்லாந்து அணிக்கு எதிரான நான் 48 ரன்கள் எடுத்திருந்தேன்.
அப்போது வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்ட போது, தோனி ஸ்ட்ரைக்கில் இருந்தார். அந்த 2 ரன்களையும் நானே எடுத்து அரைசதம் விளாச உதவியது தோனி தான். நானும், தோனியும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டோம். நாங்கள் மீண்டும் சந்தித்தால், நண்பர்களாக தான் பேசுவோம். இருவரும் ஒருவருக்கொருவர் தேவையில்லை என்று நினைக்க மாட்டோம். அண்மையில் கூட ஒரு விளம்பர படத்திற்கான படப்பிடிப்பில் ஈடுபட்ட போது, பழைய நாட்கள் குறித்து பேசி மகிழ்ச்சியடைந்தோம் என்று கூறினார்.