தோனியை புரிஞ்சுக்கவே முடியலையே! அங்க ஏன் போனாரு? கிரிக்கெட் “போர்” அடிச்சுருச்சோ!
சென்னை : இந்திய அணியின் முன்னணி வீரர் தோனி தமிழகத்தை சேர்ந்த இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாகக் கூட்டத்தில் கலந்து கொண்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார்.
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் சீனிவாசன் தான் சிஎஸ்கே அணியின் பங்குகளை வைத்துள்ளார்.
அந்த வகையில் தோனி இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் கௌரவ பதவியில் இருக்கிறார் என கூறப்படுகிறது. இதுவரை இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாக விஷயங்களில் தலையிடாத தோனி முதல் முறையாக நிர்வாகக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

தோனியின் கௌரவ பதவி
தோனி இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவின் துணை தலைவராக (Vice President - Marketing) இருக்கிறார். தோனிக்கு இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் பங்குகள் இருக்கிறதா என்பது தெரியவில்லை. எனினும், தோனி தன் பதவியை இதுவரை கௌரவ பதவியாகவே கருதி வந்துள்ளார்.

கருத்துக்களை பேசிய தோனி
செப்டம்பர் 2018 காலாண்டு முடிவுகள்படி நிறுவனத்தின் நிதி செயல்பாடுகள் குறித்து விவாதிக்க இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டியது. அதில் தோனி ஒரு நிர்வாகியாக கலந்து கொண்டார். தோனி அந்த கூட்டத்தில் தன் கருத்துக்கள் சிலவற்றையும் பேசியதாக தெரிகிறது.

100 சதவீதத்தை தொட வேண்டும்
குறிப்பாக மார்க்கெட்டிங் பிரிவு துணை தலைவர் என்ற முறையில், நிறுவனத்தின் வளர்ச்சி பற்றி பேசியுள்ளார். "இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சியில் நான் மிக உறுதியாக இருக்கிறேன். சந்தையில் தேவை அதிகரித்து வரும் நிலையில், அதை முழுவதுமாக பயன்படுத்திக் கொள்வதில் நாம் 100 சதவீதத்தை தொட வேண்டும்" என தோனி பேசியதாக நிர்வாகிகள் கூறினர்.

இனி நிர்வாகத்தில் அதிக நேரம்
தோனி இதுவரை சிமெண்ட் உற்பத்தி முறைகள் பற்றி தெரிந்து கொள்ளவே இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் பல்வேறு அலுவலகங்களுக்கு சென்றுள்ளார். முதன்முறையாக நிர்வாக விஷயங்களில் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளார் தோனி. தோனி டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். அடுத்து, டி20 அணியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடி வருவதால் தோனி இனி நிர்வாக ரீதியான விஷயங்களில் அதிக நேரம் செலவு செய்வார் என சில இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாகிகள் கூறினர்.


Click it and Unblock the Notifications