சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி மீண்டும் நியமிக்கப்பட்டது அடுத்து அவரது ரசிகர்கள் மெய்சிலிர்த்து, சமூக வலைதளங்களில் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தனது சமூக வலைதள பக்கங்களில் தோனி கேப்டனானதை ஒட்டி ஒரு சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் தோனி பயிற்சி செய்யும் காட்சிகளையும், இதற்கு முன் கேப்டனாக சிஎஸ்கே அணிக்காக விளையாடிய காட்சிகளையும் தொகுத்து வழங்கி உள்ளது. அதன் பின்னணியில் ஒலிக்கும் பாடல் தான் அதை உணர்ச்சி பூர்வமான காணொளியாக மாற்றி உள்ளது. விக்ரம் திரைப்படத்தில் இடம்பெற்ற "போர்க்கண்ட சிங்கம்" என்ற பாடல் அதில் இடம்பெற்றுள்ளது.

"போர்க்கண்ட சிங்கம்.. யார் கண்டு அஞ்சும்.. மாறாது, மாறாது இவன் வீரமே" என அனிருத் பாடிய அந்தப் பாடலின் பின்னணியில் தோனி கேப்டனாகவும், 43 வயதிலும் துடிப்புடன் பயிற்சி செய்யும் வீடியோ காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. அதை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வரும் தோனி ரசிகர்கள் தங்கள் உணர்ச்சிப் பெருக்கையும் வெளிப்படுத்தி உள்ளனர்.
தோனி தற்போது மீண்டும் சிஎஸ்கே அணியின் கேப்டன் ஆனதால் அந்த அணி வெற்றிப் பாதைக்கு திரும்பும் எனவும் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த அணியின் கேப்டனாக இருந்த ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டதால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து அவர் நீக்கப்பட்டிருக்கிறார்.
இனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகளில் ருதுராஜ் இடம் பெற மாட்டார். அவருக்கு மாற்றாகவே தோனி மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். ருதுராஜ் கெய்க்வாட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிறந்த பேட்ஸ்மேன் எனும் நிலையில் அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது என்பது ஒரு புறம் இருந்தாலும், தோனியின் கேப்டன்சியில் இருக்கும் வீரர்களை வைத்து சிஎஸ்கே அணி வெற்றி பாதைக்கு வந்து விடும் என அந்த அணியின் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
ஏப்ரல் 11 அன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அடுத்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக விளையாட உள்ளது. அந்த போட்டியில் தோனி கேப்டனாக களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை சேப்பாக்கத்தில் தோனி கேப்டனாக களம் இறங்கும் காட்சியைக் காண அந்த அணியின் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் உள்ளனர்.