சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக விளையாடப் போகிறார் என்ற செய்தி நேற்று முதல் பரவி வருகிறது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள நிலையில் இந்த தகவல் பரவி வருகிறது.
இதில் ஓரளவு உண்மை இருந்தாலும், கடைசி நிமிடத்தில் தான் தோனியின் கேப்டன்சி குறித்த முடிவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஒரு சிக்கலை தாண்டினால் தான் தோனியை கடைசியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக பார்க்க முடியும் என்ற நிலை உள்ளது.

2024 ஐபிஎல் தொடர் முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் செயல்பட்டு வருகிறார். தோனி அவரது கேப்டன்சியில் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடி வருகிறார். ஆடுகளத்தில் ஆலோசனைகளையும் அளித்து வருகிறார். இந்த நிலையில் 2025 ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டிக்கு முன்னதாக ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கையில் காயம் ஏற்பட்டு இருக்கிறது.
அதனால், அவரால் பேட்டிங் செய்ய முடியுமா என்ற சந்தேகம் உள்ளது. எனவே, அவரை அணியிலிருந்து நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்படக்கூடும். போட்டி தொடங்குவதற்கு முன்பு வரை அவரது காயம் குறித்து சிஎஸ்கே நிர்வாகம் எந்த இறுதி முடிவையும் எடுக்கப்போவதில்லை என கூறப்படுகிறது. எனினும், அவரால் பேட்டிங் செய்ய முடியவில்லை என்ற முடிவை எடுத்தால் அவரை இந்த போட்டியில் இருந்து நீக்கி ஓய்வு அளிக்க வேண்டும்.
அந்த சந்தர்ப்பத்தில் வேறு ஒருவரை கேப்டனாக நியமிக்க வேண்டும். முன்னாள் கேப்டனான, அனுபவ வீரர் தோனியை கேப்டனாக நியமிக்க சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக நேற்று முதல் தகவல் பரவி வருகிறது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடனான போட்டி இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்க உள்ளது. அதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தான் யார் கேப்டன் என்ற முடிவை சிஎஸ்கே நிர்வாகம் எடுக்க உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
நேற்று சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி பேசுகையில், "எங்கள் அணியில் இருக்கும் இளம் விக்கெட் கீப்பர் கேப்டன்சியில் ஓரளவு அனுபவம் உடையவர். அவர் கேப்டனாக செயல்பட வாய்ப்பு உள்ளது" என்று வேடிக்கையாக தோனி பற்றி சொல்லி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை தோனி இந்த போட்டியில் கேப்டனாக செயல்பட்டால், இதுவே அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்படும் கடைசி போட்டியாகவும் இருக்கலாம். அதனால் இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.