அரசியலில் கிரிக்கெட் நட்சத்திரங்கள்
தோனி, கம்பீர், சேவாக் ஆகிய கிரிக்கெட் நட்சத்திரங்கள் அடுத்த வருடம் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பாரதீய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட உள்ளார்கள் என கூறப்படுகிறது. இவர்கள் மூவரும் நாடு முழுவதும் பிரபலமான கிரிக்கெட் நட்சத்திரங்கள். இவர்களை பயன்படுத்தினால் நாடு முழுவதும் ஓட்டுகளை அள்ளலாம் என திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாடு முழுவதும் பிரபலமானவர்கள்
தற்போது பிஜேபியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், "தோனி, கம்பீர் இருவரும் நாடு முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட, பிரபலமான, மக்களிடம் செல்வாக்கு உள்ளவர்கள். சமூகத்தின் அனைத்து தரப்பிலும் தலைவர்களாக அறியப்படுகிறார்கள். அவர்களது மாநிலத்தில் மட்டுமல்லாது, நாடு முழுவதும் தலைவர்களாக இருக்கிறார்கள்" என கூறினார்.
கம்பீர் வடக்கில் ஜொலிப்பார்
2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த தேர்தலில் பிஜேபி அதிக இடங்களை பெற பிரபலங்களை பெரியளவில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. கிரிக்கெட் வீரர் கம்பீரை பொறுத்தவரை, அவர் தனக்கென ஒரு சுயமரியாதை கொண்டவர். தவறுகளை கண்டு பொங்கும் குணம் படைத்தவர் என சமூக வலை தளத்தில் பெயரெடுத்துள்ளார். அவரை டெல்லி லோக்சபா தொகுதியில் போட்டியிட வைத்தால் நிச்சயம் வென்று விடுவார். அது மட்டுமின்றி அவரை இந்தியா முழுவதும் பிரச்சாரத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக, ஹிந்தி பேசும் மாநிலங்களில் இவருக்கு அதிக செல்வாக்கு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
தோனியின் தென்னிந்திய செல்வாக்கு
அதே போல, தோனி ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். தன் சொந்த மாநிலம் மட்டுமின்றி நாடு முழுவதும் அதிக மதிப்பு கொண்டவராக இருக்கிறார் தோனி. இந்திய அணியின் சிறந்த கேப்டன் என்றால் கங்குலிக்கு பிறகு இவர் பெயர் தான் பலருக்கும் நினைவுக்கு வரும். அது மட்டுமின்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் என்ற முறையில் தென்னிந்தியா முழுவதும் அதிக செல்வாக்கு கொண்டுள்ளார் தோனி. அதை பிரச்சாரத்தில் பயன்படுத்தி தென்னிந்தியாவில் சரிவில் இருக்கும் பிஜேபியின் மதிப்பை உயர்த்திக் கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. வருக்கு ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பும் அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
யார் அரசியலில் குதிப்பார்கள்
இந்த செய்திகள் அனைத்தும் இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை. பிஜேபி கட்சியும், சம்பந்தப்பட்ட விளையாட்டு வீரர்களும் தான் இதற்கு பதில் அளிக்க வேண்டும். இதில் கம்பீர் சமீப காலமாக தொடர்ந்து சமூக அக்கறை கொண்ட செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தோனியோ 2019 உலகக்கோப்பை வரை இந்திய அணியில் ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இவர்களில் யார் அரசியலில் குதிக்க அதிக வாய்ப்புள்ளது? நீங்களே சொல்லுங்களேன்.