இளம் வீரர்களை சிறப்பாக வழி நடத்தினார் சச்சின்-டோணி புகழாரம்
மொஹாலி: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடியதோடு, இளம் வீரர்களையும் சிறப்பாக வழி நடத்தினார் சச்சின் டெண்டுல்கர் என்று புகழாரம் சூட்டியுள்ளார் கேப்டன் டோணி.

மிக மிக விறுவிறுப்பாக நேற்று நடந்த மொஹாலி அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை பிரமாதமாக வீழ்த்தியது இந்தியா. ஒட்டுமொத்த அணியுமே நேற்று மிகச் சிறப்பாக விளையாடியது. பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என கலக்கிய இந்தியா, இறுதியில் 29 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.
போட்டியின் நாயகன் சச்சின் என்றாலும் கூட ஒட்டுமொத்த அணியுமே கூட நேற்று ஆட்ட நாயகர்களாகத்தான் திகழ்ந்தார்கள்.
போட்டி முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் டோணி சச்சினை வெகுவாக புகழ்ந்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தான் மட்டுமல்லாமல் மற்றவர்களையும் பேட் செய்ய வைத்து அழகு பார்ப்பவர் சச்சின். அவருடன் 15 முறை பேட் செய்தால் போதும், 50 போட்டிகளில் விளையாடிய அனுபவம் கிடைக்கும் என்றார்.
அதேபோல ஆசிஷ் நெஹ்ரா குறித்தும் அவர் பாராட்டினார். நெஹ்ரா குறித்துக் கூறுகையில், சில நாட்களுக்கு முன்பு அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ஆனால் இன்று அபாரமாக பந்து வீசினார். அவர் மீண்டும் பார்முக்குத் திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. அணியில் ஒற்றுமை மிக பலமாக உள்ளது. யாராவது சரியான பார்மில் இல்லாவிட்டால் மற்ற அனைவருமே அவருக்கு ஆதரவாக நடந்து கொள்கிறோம். இதனால் போன பார்ம் கூட திரும்பி விடுகிறது என்று கூறிய டோணி சுரேஷ் ரெய்னாவையும் பாராட்டத் தவறவில்லை.
சுரேஷ் ரெய்னா இன்று விளையாடிய விதம் அபாரமானது. கடைசி வரை நிற்க வேண்டிய நிலையை உணர்ந்து அதற்கேற்ற வகையில் அவர் சிறப்பாக ஆடினார். அவர் எடுத்த 38 ரன்கள்தான் அணியின் வலுவுக்கு காரணமாக அமைந்தது என்றார் டோணி.
இறுதிப் போட்டி குறித்து அவர் கூறுகையில், இறுதிப் போட்டிக்கு நாங்கள் தயாராகவே உள்ளோம். எங்களை மோட்டிவேட் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. அத்தனை பேரும் தீயாக இருக்கிறோம்.
இலங்கை அணி ஆரம்பத்திலிருந்தே எளிதான வெற்றிகளுடன் வந்துள்ளது. ஆனால் நாங்கள் அப்படி இல்லை. கடினமான அணிகளை சந்தித்து அதைக் கடந்து இறுதிப் போட்டிக்கு வந்துள்ளோம்.
உள்ளூரில் விளையாடுவதால், அதிலும் உலகக் கோப்பை இறுதிப் போட்டி என்பதால் நிச்சயம் நெருக்குதல் இருக்கத்தான் செய்யும். ஆனால் அதை தாண்டி விளையாட முன்வர வேண்டும். அதேசமயம், நெருக்குதல் இருப்பதும் கூட ஒரு வகையில் உங்களை நன்றாக விளையாடத் தூண்டும் என்பதால்அதை நாங்கள் வரவேற்கிறோம் என்றார் 'கேப்டன் கூல்' டோணி.
உலக கோப்பை கிரிக்கெட்:சிறப்பு பக்கம்
Story first published: Thursday, June 7, 2012, 12:25 [IST]
Other articles published on Jun 7, 2012


Click it and Unblock the Notifications