ஓய்வு சர்ச்சை
தோனி உலகக்கோப்பை தொடரில் ஆடிக் கொண்டு இருந்த போதே உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டி தான் அவரின் கடைசி போட்டி என வதந்திகள் பரவின. அது குறித்து அப்போது பேசிய தோனி, சிலர் தான் பாதி உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு பெற்று விட வேண்டும் என நினைக்கிறார்கள் என கூறினார்.
பேட்டிங் மந்தம்
தோனியின் பேட்டிங் முன்பு போல அதிரடியாக இல்லை என்பதும் அவரது ஓய்வுப் பேச்சுக்கள் அதிகரிக்க முக்கிய காரணம். உலகக்கோப்பை தொடரில் சில போட்டிகளில் தோனி மிகவும் நிதானமாக ஆடினார். அது அப்போது சர்ச்சைக்கு உள்ளானது.
வெஸ்ட் இண்டீஸ் தொடர்
உலகக்கோப்பை முடிந்த நிலையில் அடுத்து இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இதில் தோனி இடம் பெறுவாரா? என்பது தேர்வுக் குழுவுக்கு குழப்பமாக அமைந்துள்ளது. தோனி இதுவரை தன் எதிர்கால திட்டம் குறித்து எதுவும் கூறவில்லை.
தோனி ஓய்வு இல்லை
இந்த நிலையில் தோனியின் நீண்ட கால நண்பரான அருண் பாண்டே தோனி இப்போதைக்கு ஓய்வு பெறும் திட்டம் எதுவும் இல்லை. ஒரு பெரிய வீரர் குறித்து தொடர்ந்து இது போன்ற ஊகங்கள் எழுந்து வருவது துரதிர்ஷ்டவசமானது என்று தன் வருத்தத்தை பதிவு செய்தார்.
எப்போது ஓய்வு பெறுவார்?
தோனி எப்போது ஓய்வு பெறுவார் என்பது குறித்து அவர் ஏதும் கூறவில்லை. சிலர் 2020 டி20 உலகக்கோப்பை தொடருடன் தோனி ஓய்வு பெற உள்ளார் என கூறுகிறார்கள். அதனால், இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு தோனி குறித்து என்ன முடிவு எடுப்பது என புரியாமல் தவித்து வருகிறார்கள்.
ஐபிஎல் உறுதி
என்ன நடந்தாலும், 2020 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி ஆடுவார் என்பது மட்டுமே தற்போது உறுதியாகி உள்ளது. அதன் பின்பு தான் தோனி ஓய்வு பெறுவார் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.