சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் மிகவும், அன்பானவர்கள், பண்பானவர்கள் என்று புகழாரம் சூட்டியுள்ளார், மும்பை அணிக்காக கடந்த வருடம் மட்டும் ஆடிவிட்டு மீண்டும் சென்னை திரும்பியுள்ள மைக் ஹஸ்சி.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த மாஜி முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் மைக் ஹஸ்சி. ஐ.பி.எல். போட்டியில் இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 2008 முதல் 2013 வரை விளையாடினார். 2011 மற்றும் 2013ல் அதிக ரன் எடுத்த சென்னை வீரராக திகழ்ந்தார்.

கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல். போட்டியில் மைக்ஹஸ்சி மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடினார். தற்போது நடைபெற இருக்கும் 8வது ஐ.பி.எல். போட்டியில் ஹஸ்சி மீண்டும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடுகிறார். அவரை ரூ 1.5கோடிக்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்தது.
ஐபிஎல் அதிகாரபூர்வ இணையதளத்தில் மைக் ஹஸ்சி கூறியிருப்பதாவது:
சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிக்கு டோணி மற்றும் பிளமிங் ஒரு முக்கிய பங்களிப்பாக இருப்பார்கள். இருவரும் மிக நுட்பமான கிரிக்கெட் அறிவு உடையவர்கள். நெருக்கடியான நேரத்திலும், பதற்றப்படாமல் திட்டம் தீட்டுவார்கள் அவர்களிடையே நல்ல நட்புறவு உள்ளது.
அணியில் உள்ள வீரர்கள் மனதிறந்து நேர்மையாக பழகுகிறார்கள். வீரர்களுக்கு இடையில் மிகதெளிவான தொடர்புகள் உள்ளன. யாரும் உணர்ச்சிவசப்படுவது கிடையாது. கேப்டனை போலவே கூலாக பழகி வருகிறார்கள். அவர்களுக்கு இடையில் உள்ள கட்டுப்பாடு மற்றும் சமநிலையை நன்றாக பராமரிக்கிறார்கள். இது வீரர்கள் அறையில் ஆரோக்கியத்தை தருகிறது.
ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க்கைவிட, டோணி மிகவும் கூலாக காணப்படுகிறார். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.