தல தோனி இல்லைன்னா நான் இல்ல.. அவரால் தான் இந்தளவுக்கு உயர்ந்திருக்கிறேன்.. சொல்றது யாருன்னு பாருங்க
மும்பை:தோனி இருப்பதால் தான், தம்மால் அணிக்குள் சுதந்திரமாக செயல்பட முடிகிறது என்று கேப்டன் விராட் கோலி கூறியிருக்கிறார்.
இந்திய அணி உலக கோப்பை தொடருக்கு தயாராகி விட்டது. 15 பேர் கொண்ட அணியும் அறிவிக்கப்பட்டுவிட்டது. ஒன்றரை மாதங்களை கடந்து சென்று கொண்டிருந்த ஐபிஎல் தொடரும் நிறைவு பெற்றது. வரும் 30ம் தேதி முதல் உலக கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது.

இந்திய அணி சார்பில் முதன்முறையாக கேப்டனாக அணியை வழிநடத்த உள்ளார் விராட் கோலி. இந்நிலையில் பிரபல கிரிக்கெட் இணையதளம் ஒன்றுக்கு அவர் பிரத்யேக பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
அணியின் நன்மைதான் தோனிக்கு முக்கியம், அதனால்தான் சுதந்திரமாக என்னை செயல்பட அனுமதிக்கிறார் என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
தோனியை பற்றி நான் எதை கூறுவது. என் கிரிக்கெட் பயணம் அவரது தலைமையில் தான் இந்திய அணியில் ஆரம்பித்தது. அவரிடம் நெருங்கி பழகிய சிலரில் நானும் ஒருவன். அவரை பற்றி ஒன்று சொல்லியே ஆக வேண்டும்.
எது எப்படி போனாலும் அணியின் நலன் தான் அவருக்கு முக்கியம். அவருடைய அனுபவம் அணிக்கு வலு சேர்த்திருக்கிறது. அண்மையில் முடிந்த ஐபிஎல் தொடரில் அவரின் ஸ்டெம்பிங், போட்டியின் முடிவையே மாற்றி இருக்கிறது.
அணியில் அவர் இருக்கும் போது இக்கட்டான தருணங்களில் எனக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கியவர். தோனி மிகுந்த புத்திசாலி. அவர் அணியில் இருக்கும் பொழுதெல்லாம் என்னால் சுதந்திரமான முடிவுகள் எடுக்க முடிகிறது என்றார்.


Click it and Unblock the Notifications