மும்பை: தனது கிரிக்கெட் வாழ்க்கை பெரிய அளவு ஜொலிக்காமல் போனதற்கு தோனி காரணமா என்ற கேள்விக்கு இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா விளக்கம் அளித்துள்ளார். தோனிக்கு மிஸ்ரா மீது முழு நம்பிக்கை இல்லை என்ற வதந்திகளும், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா போன்ற சுழற்பந்து வீச்சாளர்கள்வருகை காரணமாக மிஸ்ராவின் சர்வதேச வாய்ப்புகள் குறைந்தன என்ற கருத்துக்களும் பரவியிருந்தன.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள அமித் மிஸ்ரா, "தோனி இல்லையென்றால் எனது தொழில் வாழ்க்கை சிறப்பாக இருந்திருக்கும் என்று பலர் கூறுகிறார்கள். ஆனால் அவர் இல்லையென்றால் நான் அணியிலேயே இருந்திருப்பேனா என்பது யாருக்குத் தெரியும்? நான் அவர் தலைமையில்தான் அணிக்குள் வந்தேன். மேலும், தொடர்ந்து அணிக்குத் திரும்பி வந்தேன். கேப்டனாக அவர் ஒப்புதல் அளித்ததால்தான் என்னால் மீண்டும் வர முடிந்தது." என்று கூறியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் அமித் மிஸ்ராவுக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் இல்லாவிட்டாலும், கிடைத்தபோது தனது திறமையை வெளிப்படுத்தினார். 22 டெஸ்ட் போட்டிகளில் 76 விக்கெட்டுகளையும், 36 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 64 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். 10 டி20 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை எடுத்தார். தமது கிரிக்கெட் வாழ்க்கையில் தோனியின் பங்கு குறித்து பேசிய அவர், "நான் விளையாடும் அணியில் இருந்த போதெல்லாம், தோனி என்னிடம் வந்து ஆலோசனை கூறாமல் இருந்ததில்லை. அவர் எப்போதும் எனக்கு விஷயங்களைச் சொல்வார்," என்று மிஸ்ரா குறிப்பிட்டார்.
தனது கடைசி ஒருநாள் தொடரான நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் நடந்த சம்பவம் பற்றி அவர் விளக்கினார். "அது பரபரப்பான ஆட்டம். நாங்கள் 260-270 ரன்கள் எடுத்திருந்த நிலையில், நான் பந்துவீச வந்தேன். அப்போது ரன் வேகத்தைக் கட்டுப்படுத்துவதே எனது நோக்கமாக இருந்தது, விக்கெட்டுகளை எடுக்க நினைக்கவில்லை. சில ஓவர்களுக்குப் பிறகு தோனி என்னிடம் வந்து, 'நீ இயற்கையாக வீசும் பந்துகளை வீசவில்லை. அதிகம் யோசிக்காமல், நீ எப்போதும் வீசுவதைப் போலவே பந்து வீசு’ என்றார். நான் அப்படியே செய்தபோது அடுத்தடுத்து விக்கெட்டையும் பெற்றேன்," என்று மிஸ்ரா தெரிவித்தார்.
இதனையடுத்து தோனி என்னிடம் வந்து இதுதான் உன் பந்துவீச்சு, இதைத்தான் வீச வேண்டும், அதிகம் யோசிக்காதே!' என்றார். அது ஆட்டத்தின் போக்கையே மாற்றிய பந்துவீச்சாக அமைந்தது. நான் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினேன். அதுவே எனது சிறந்த பந்துவீச்சாகவும் இருந்தது என்று நினைக்கிறேன். நான் விக்கெட்டுகள் எடுக்காவிட்டால், நாங்கள் ஆட்டத்தை இழந்துவிடுவோம் என்பதே அவரது சிந்தனையாக இருந்தது. இப்படித்தான் அவர் எனக்கு ஆதரவளித்தார் என்று தோனி தொடர்பான வதந்திக்கு அவர் பதில் அளித்தார்.