கொச்சி: கொச்சியில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணிக்கும், பத்திரிக்கையாளர் ஒருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் சச்சின் நினைவாக அவரது பெயரில் ஒரு பெவிலியன் திறக்க முடிவு செய்தனர். இந்த பெவிலியின் திறப்பு விழா நேற்று நடந்தது. பெவிலியனை திறந்து வைக்க இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணியை கேரளா கிரிக்கெட் சங்கம் அழைத்திருந்தது.
விழாவுக்கு வந்த அவரை பத்திரிக்கையாளர் ஒருவர் நிறுத்தி சில வார்த்தைகள் பேசிவிட்டு பிறகு பெவிலியனை திறக்கச் செல்லுங்கள் என்று கூறியுள்ளார். தனது அணியுடன் சேர்ந்து பயிற்சி பெற வேண்டி இருந்ததால் பெவிலியனை திறந்து வைத்துவிட்டு ஓடும் வேகத்தில் இருந்த டோணிக்கு கோபம் வந்துவிட்டது.

அந்த பத்திரிக்கையாளருடன் சேர்ந்து கேரளா கிரிக்கெட் சங்கத்தினரும் டோணியை பேசிவிட்டு செல்லுமாறு கூறினர். இதை டோணி ஏற்காததால் அங்கு சூடான வாக்குவாதம் நடந்தது.
வழக்கமாக எந்த சூழலிலும் அமைதியாக இருக்கும் கூல் கேப்டன் டோணி பொறுமையை இழந்துவிட்டார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான சர்வதேச ஒரு நாள் போட்டி இன்று கொச்சி நேரு ஸ்டேடியத்தில் தான் நடந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.