இப்போ கொஞ்சம் கிரிக்கெட்.. விரைவில் அரசியல்.. அதுவும் பாஜகவில்? தோனியின் மாஸ்டர் பிளான்
மும்பை: கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றபின் தோனி பாஜகவில் இணைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உலக கோப்பை தொடரில் தோல்வி அடைந்து இந்திய அணி வெளியேறி விட்டது. அதற்கான காரணங்கள், சர்ச்சைகள் என பட்டியல் நீண்டு கொண்டு போகிறது. அதை விட ஒரு முக்கிய விவகாரம் தலையாய விவாத பொருளாக மாற தொடங்கி இருக்கிறது..
அது தோனி ஓய்வுக்கு பிறகு என்ன செய்ய போகிறார் என்பது தான். கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற பிறகு, ஜார்க்கண்ட் மாநில அரசியலில் களம் இறங்க போகிறார் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் உலா வரத் தொடங்கி இருக்கின்றன.

ஜார்க்கண்ட் தேர்தல்
ஏன் எனில், ஜார்கண்ட் மாநிலத்தில் டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் வருகிறது. அங்கு பாஜக தலைமையில் ஆட்சியில், முதல்வராக ரகுபர் தாஸ் உள்ளார். வரும் சட்ட சபை தேர்தலில், தோனியை பாஜக சார்பில் களமிறக்க திட்டமிட்டு வருகிறது.

தீவிர பேச்சுவார்த்தை
இந்நிலையில் ஜார்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக தோனியை பாஜகவில் இணைப்பதற்கான தீவிர பேச்சு நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓய்வு அறிவித்தபின் அவர் பாஜகவில் சேரவே அதிக வாய்ப்புகள் உள்ளன என்று முன்னாள் மத்திய அமைச்சர் சஞ்சய் பாஸ்வான் கூறி உள்ளார்.

நிச்சய வாய்ப்பு
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: தோனியிடம் நீண்டகாலமாக பேச்சு நடத்தி வருகிறோம். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்தபின் நிச்சயம் பாஜகவில் சேர்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

முயற்சிகள் நடக்கின்றன
தோனி எனது நெருங்கிய நண்பர். உலக அளவில் அவர் பெயர் பெற்றவர். அவரை கட்சிக்குள் கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளும் நடந்து வருகின்றன என்றார்.

கவுதம் கம்பீர்
ஏற்கெனவே லோக்சபா தேர்தலுக்கு முன்பாக, கவுதம் கம்பீர், பாஜக தலைவர் அமித் ஷா சந்தித்துப் பேசினார். அதன்பின் பாஜகவில் இணைந்த கம்பீருக்கு டெல்லி கிழக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் அவர் வெற்றி பெற்று தற்போது எம்.பி.யாக இருக்கிறார்.


Click it and Unblock the Notifications