நியூ யார்க் : கிரிக்கெட் வீரர் தோனி இந்தியாவைத் தாண்டி உலக அளவில் பிரபலமாக மாறி விட்டார் என்பதை காட்டும் வகையில் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
சமீபத்தில் தோனி அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கே அவர் பல்வேறு இடங்களுக்கு சென்ற புகைப்படங்கள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில், அவர் முன்னாள் அமெரிக்க அதிபருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது.
கோல்ஃப் ஆடுகளத்தில் தோனியுடன் பல்வேறு நபர்கள் இருந்த அந்தப் புகைப்படத்தில் இருந்தது யார் என்று உற்று நோக்கினால்.. அட நம்ம டொனால்ட் ட்ரம்ப்.

அமெரிக்க வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்குரிய அதிபராக இருந்த டொனால்ட் ட்ரம்ப் சமீப காலமாக எந்த சத்தமும் இன்றி இருக்கிறார். அவர் மீது அரசாங்க ரீதியாக பல்வேறு வழக்குகள் நடந்து வருவதும் ஒரு காரணம்.
இந்த நிலையில் தான் அமெரிக்கா சென்ற தோனி அங்கே கோல்ஃப் ஆடும் போது டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்து இருக்கிறார். அவர்கள் இருவரும் அருகருகே நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
சமீபத்தில் இந்தியா வந்துள்ள WWE வீரர்கள் தோனி பற்றி பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆனது. அதை அடுத்து தற்போது முன்னாள் அமெரிக்க அதிபருடன் இருக்கும் புகைப்படம் வைரல் ஆகி இருக்கிறது.
தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவரது மவுசு மட்டும் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போவதுதான் மிகவும் ஆச்சரியம். ஐபிஎல் தொடரில் மட்டுமே சிஎஸ்கே அணிக்காக பங்கேற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.