ஓய்வு வதந்திகள்
2019 உலகக்கோப்பை தொடருக்குப் பின் தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்கப் போகிறார் என்ற பேச்சு கிளம்பியது. கடந்த சில வாரங்கள் முன்பு கூட தோனி ஓய்வு அறிவிக்கப் போகிறார் என்ற வதந்தி கிளம்பியது.
இரண்டு மாத விடுப்பு
ஆனால், இதுவரை ஓய்வு அறிவிக்காத தோனி முதலில் இரண்டு மாத காலம் விடுப்பு எடுத்துக் கொண்டு, சுமார் 16 நாட்கள் இந்திய இராணுவத்தில் பணியாற்றினார். பின்னர், குடும்பத்தினருடன் செலவிட்டார்.
மீண்டும் விடுப்பு
அந்த இரண்டு மாத காலத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா தொடர்களில் அவர் பங்கேற்கவில்லை. இந்த நிலையில், மீண்டும் இரண்டு மாத காலம் தோனி விடுப்பு எடுத்துக் கொள்ளப் போவதாக பிசிசிஐ வட்டாரம் கூறி இருக்கிறது.
வங்கதேச தொடரில் இல்லை
அதன் படி, நவம்பர் வரை தோனி இந்திய அணியில் பங்கேற்க மாட்டார். இந்த காலத்தில் தான் இந்தியா - வங்கதேச கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. அதிலும் தோனி பங்கேற்கப் போவதில்லை என கூறப்பட்டதால் ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்தனர்.
கிரிக்கெட் ஆடுவாரா?
தோனி இனி கிரிக்கெட் ஆடுவாரா? என கேட்கத் துவங்கினர். சிலர் தோனி விரும்பினாலும், தேர்வாளர்கள் அவரை தேர்வு செய்ய மாட்டார்கள் என கூறி வந்தனர். இந்த நிலையில் தான் தோனி பற்றிய புதிய தகவல் கிடைத்துள்ளது.
டிசம்பரில் வருகிறார்
நவம்பர் வரை ஓய்வில் இருக்கப் போகும் தோனி, டிசம்பர் மாதம் நடைபெற உள்ள இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடரில் டி20 தொடரில் பங்கேற்பார் என கூறப்படுகிறது. அதனால் தான் நவம்பர் வரை மட்டுமே விடுப்பை அறிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
காரணம் என்ன?
அப்படி என்றால், ஏன் தோனி தொடர்ந்து நான்கு மாதம் விடுப்பு எடுக்க வேண்டும்? இந்த கேள்விக்கு சொல்லப்படும் பதில் இது தான். 2020 டி20 உலகக்கோப்பை தொடருக்கு இந்திய அணி தயார் ஆகும் வகையில் தோனி அணியில் இருந்து விலகி இருக்கிறார்.
அதிக வாய்ப்பு
ரிஷப் பண்ட் தோனிக்கு பின் அணியின் விக்கெட் கீப்பராகி இருக்கும் நிலையில், அவருக்கு அதிக வாய்ப்பு வழங்கும் வகையில் தான் தோனி சில காலத்துக்கு விலகி இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
ரிஷப் பண்ட் நிலைமை
ரிஷப் பண்ட் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் படு மோசமாக ஆடி சொதப்பினார். இந்த நிலையில், அவருக்கு மீண்டும் வங்கதேச தொடரில் வாய்ப்பு வழங்கவே தோனி மீண்டும் இரண்டு மாத காலத்திற்கு, நவம்பர் வரை விலகி இருக்கலாம்.
உலகக்கோப்பையில் ஆடுவாரா?
2020 டி20 உலகக்கோப்பை தொடரில் தோனி ஆட திட்டமிட்டுள்ளாரா என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் தோனி பங்கேற்க இருக்கிறார் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதை உறுதிப்படுத்தி இருக்கிறது.