இராணுவத்தில் தோனி
தோனி அடுத்த இரண்டு மாதங்களுக்கு இராணுவ பயிற்சியில் ஈடுபட வேண்டி கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கினார். அதனால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவர் அணியில் சேர்க்கப்படவில்லை. இந்திய இராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் கலோனல் என்ற பதவியில் இருக்கும் தோனிக்கு எளிதாக இராணுவ அனுமதியும் கிடைத்தது.
16 நாட்கள் இருப்பார்
அதன் பின் ஜூலை 30 முதல் 16 நாட்களுக்கு காஷ்மீரில் இராணுவ பணியில் ஈடுபடுத்தப்பட்டார் தோனி. 106 டிஏ என்றும் தரைப்படையுடன் தோனி இணைந்தார். ஆகஸ்ட் 15 வரை அந்த படையினருடன் தோனி காஷ்மீரில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டது.
காஷ்மீர் மாற்றம்
இந்த நிலையில், இரு நாட்களுக்கு முன் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை நீக்கியது மத்திய அரசு. மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றியது. இதனால், காஷ்மீரில் பதற்றம் நிலவி வருகிறது.
தோனிக்கு எதிர்ப்பு
காஷ்மீரில் பரபரப்பான சூழ்நிலை நிலவும் நிலையில் தோனி பாரமுல்லா பகுதியில் இராணுவத்தினருடன் பொது மக்கள் இருக்கும் பகுதி அருகே சென்று உள்ளார். அங்கே தோனிக்கு சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர்.
அந்த பெயர்
தங்கள் எதிர்ப்பை குறிப்பாக உணர்த்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்ரிடியை குறிப்பிட்டு, "பூம் பூம் அப்ரிடி" என அவரது பட்டப் பெயருடன் சேர்த்து கோஷமிட்டனர். இந்த கோஷத்தின் மூலம் தோனிக்கு எதிர்ப்பும் தெரிவித்து, பாகிஸ்தானுக்கு ஆதரவும் தெரிவித்ததாக கருதப்படுகிறது.
பரவும் வீடியோ
இந்த காட்சிகள் இடம் பெற்ற வீடியோ ஒன்று பாகிஸ்தானில் பரவி வருகிறது, அங்கு உள்ள செய்தித் தொலைக்காட்சிகளில் இதை ஒளிபரப்பி வருகின்றனர். காஷ்மீர் விவகாரத்தில் ஏற்கனவே இரு நாடுகள் இடையே பதற்றம் நிலவும் நிலையில், இது மேலும் பரபரப்பை கூட்டி இருக்கிறது.
பெரிய பாதிப்பு இல்லை
நல்லவேளையாக தோனிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிகிறது. தோனி தொடர்ந்து இராணுவத்தில் தன் பணியை தொடர்ந்து, பின் ஆகஸ்ட் 31 அன்று திரும்புவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.