புனே: ஐபிஎல் போட்டிகளில் 50 முறை நாட்அவுட் என்ற சாதனையைப் புரிந்துள்ள நாட்-அவுட் கிங்கான சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் டோணி, புனேயில் இன்று நடக்கும் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்குகிறார். தொடர்ந்து அதிகப் போட்டிகளில் பங்கேற்றவர் மற்றும் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனையைப் படைத்திருந்த சின்ன தல ரெய்னாவும் களமிறங்குவது சிஎஸ்கே ரசிகர்களுக்கு நல்ல செய்தியாகும்.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. சீசனின் 17வது ஆட்டத்தில் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. புனேயில் இந்தப் போட்டி நடக்க உள்ளது. சிஎஸ்கே அணியின் புதிய சொந்த மைதானமான புனேயில் நடக்கும் முதல் போட்டி இதுவாகும்.
பஞ்சாப் அணிக்கு எதிராக நடந்த போட்டியின்போது 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார் சிஎஸ்கே கேப்டன் டோணி. 162 ஆட்டங்களில் விளையாடியுள்ள டோணி, 50வது முறையாக நாட்-அவுட் என்ற சாதனையைப் புரிந்தார்.
ஏற்கனவே ஒருதினப் போட்டிகளில் அதிக ஆட்டங்களில் நாட்-அவுட் என்ற சாதனையும் அவரிடமே உள்ளது. 318 ஒருதினப் போட்டிகளில் 78 முறை அவுட்டாகாமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில் தசைப் பிடிப்பால் கடந்தப் போட்டியில் விளையாடாமல் இருந்த சின்ன தல சுரேஷ் ரெய்னாவும் இன்றைய போட்டியில் களமிறங்குகிறார்.
ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற பட்டியலில் 4558 ரன்களுடன் அவர் முதலிடத்தில் இருந்தார். பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோஹ்லி 4619 ரன்கள் எடுத்து முந்தியுள்ளார். மீண்டும் முதலிடத்தைப் பிடிக்க ரெய்னாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதேபோல் சிஎஸ்கே அணிக்காக தொடர்ந்து 158 போட்டிகளில் விளையாடிய சுரேஷ் ரெய்னா, முதல் முறையாக ஒரு போட்டியில் பங்கேற்க முடியாத நிலை இருந்தது.
டோணி மற்றும் ரெய்னா இன்றைய போட்டிக்கு திரும்பியுள்ளது சிஎஸ்கே ரசிகர்களுக்கு இனிப்பான செய்தியாகும்.