கேப்டன் ஆன தோனி
2007இல் டி20 உலகக்கோப்பை விளையாட தேர்வு செய்யப்பட்ட இளம் டி20 அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார் தோனி. அப்போது உலகக்கோப்பை தொடரை வென்றதை அடுத்து, ஒருநாள் அணிக்கும் சேர்த்து கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
2008 இங்கிலாந்து தொடர்
அடுத்து 2008இல் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இர்பான் பதான் முதலில் தேர்வு செய்யப்படவில்லை. ஆர்பி சிங் தேர்வு செய்யப்பட்டு இருந்தார்.
வெளியான வதந்தி
அதன் பின் நான்காவது மற்றும் ஐந்தாவது ஒருநாள் போட்டிக்கு அணியை தேர்வு செய்யும் போது ஆர்பி சிங்கை நீக்கி விட்டு, இர்பான் பதானை தேர்வு செய்யலாம் என தேர்வுக் குழுவினர் கூறி உள்ளனர். அப்போது தோனி அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அப்படி நடந்தால் தான் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன் என கூறியதாகவும் வதந்தி வெளியானது.
தோனி என்ன சொன்னார்?
அந்த செய்திகளால் இந்திய கிரிக்கெட் அரங்கில் பெரும் பரபரப்பு எழுந்தது. தோனிக்கும் தேர்வுக் குழுவுக்கும் இடையே மோதல் என்பது போன்ற செய்திகளும் வெளியானது. அது பற்றி பேட்டி அளித்த தோனி என்ன நடந்தது என்பது பற்றி கூறவில்லை.
எப்படி வெளியே வரும்?
மாறாக, எட்டு பேர் மட்டுமே பங்கேற்கும் தேர்வுக் குழு கூட்டத்தில் இருந்து எப்படி தகவல்கள் வெளியாகும்? இது மிக மோசமாகவும், அவமரியாதையான வகையிலும் இருப்பதாக பரபரப்பாக கூறினார். அவர் அப்போது வதந்திகளை மறுக்கவில்லை.
இர்பான் பதான் வேண்டாம் என்றாரா?
அதனால், இர்பான் பதானை தோனி அணியில் சேர்க்க விரும்பவில்லை என்ற கருத்தும் பரபரப்பாக பேசப்பட்டது. பின்னர் இர்பான் பதான் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட போதும் இதே சம்பவம் சுட்டிக் காட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆர்பி சிங்குக்கு வாய்ப்பு அளிக்கவில்லை
மறுபுறம் ஆர்பி சிங்குக்கு அந்த இங்கிலாந்து தொடரிலேயே இரண்டு போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு அளித்தார் தோனி. பின்னர் ஒரு கட்டத்தில் அவரும் அணியில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதனால், தோனி உண்மையில் அணியின் மேல் அக்கறை கொண்டே அன்று அப்படி சொல்லி இருப்பார் எனவும் ஒரு கருத்து உள்ளது.