
கடைசி போட்டி
தோனி 2019 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரின் அரை இறுதியில் கடைசியாக ஆடி இருந்தார். அந்தப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்து உலகக்கோப்பை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து இருந்தது. அதன் பின் அவர் இந்திய அணியில் இடம் பெறவில்லை.

ஓய்வு குறித்த பரபரப்பு
தோனி ஓய்வு பெற உள்ளதாக அப்போது முதல் பரபரப்பு கிளம்பி வந்தது. தோனி 2020 டி20 உலகக்கோப்பை தொடரில் ஆட ஆர்வமாக இருப்பதாக ஒரு தகவல் வலம் வந்தது. ஐபிஎல் தொடரில் அவர் சிறப்பாக ஆடினால் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அவர் இடம் பெறுவார் என கூறப்பட்டது.

ஐபிஎல் தள்ளி வைப்பு
இந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் தொடர் தள்ளி வைக்கப்பட்டது. 2020 டி20 உலகக்கோப்பை 2021க்கு தள்ளி வைக்கப்பட்டது. இதற்கிடையே ஐபிஎல் தொடர் செப்டம்பர் 19 முதல் துவங்க உள்ளது. அதற்காக தோனி சென்னை வந்துள்ளார். பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ளார்.

தோனி ஓய்வு அறிவிப்பு
ஆகஸ்ட் 15 அன்று இரவு 7.29 மணி அளவில் இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் சர்வதேச போட்டிகளில் இருந்து தன் ஓய்வை அறிவித்தார் தோனி. அவரது திடீர் ஓய்வு அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தோனி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

ஃபேர்வெல் போட்டி
எனினும், தோனிக்கு ஃபேர்வெல் போட்டியை நடத்த வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தங்கள் மாநிலத்தின் ஹீரோவான தோனிக்கு அவரது சொந்த ஊரான ராஞ்சியில் ஃபேர்வெல் போட்டி நடத்த வேண்டும் என பிசிசிஐக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

நீல உடையில் பார்க்க முடியாது
இது பற்றி அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஜார்கண்ட் மாநிலத்தின் அன்புக்குரிய மகனான தோனியை இனி இந்திய அணியின் நீல உடையில் பார்க்க முடியாது. ஆனால், இந்த நாட்டு மக்களின் இதயம் பூர்த்தி ஆகவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

ஜார்கண்ட்டில் ஃபேர்வெல் போட்டி
மேலும், மாஹிக்கு ராஞ்சியில் ஒரு ஃபேர்வெல் போட்டி நடத்த வேண்டும். அதை இந்த மொத்த உலகமும் கண்டு களிக்கும். தோனிக்கு ஒரு ஃபேர்வெல் போட்டி நடத்த வேண்டும். அதை ஜார்கண்ட்டில் நடத்த வேண்டும் என பிசிசிஐக்கு கோரிக்கை வைக்கிறேன் என ஹேமந்த் சோரன் கூறி உள்ளார்.

தோனிக்காவது மரியாதை அளியுங்கள்
சமூக வலைதளங்களில் ரசிகர்களும் தோனிக்கு ஃபேர்வெல் போட்டி நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர். சேவாக், கம்பீர், யுவராஜ் சிங், ஜாகிர் கான், ஹர்பஜன் சிங் ஆகியோருக்கு ஃபேர்வெல் போட்டி அளிக்கதாதை குறிப்பிட்டு, தோனிக்காவது மரியாதை அளிக்கும் வகையில் ஃபேர்வெல் போட்டி நடத்துங்கள் என பிசிசிஐக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்

பிசிசிஐ அமைதி
தோனி ஓய்வு குறித்து, அவரது சாதனைகளை நினைவு கூர்ந்து அறிக்கை வெளியிட்ட பிசிசிஐ. ஆனால், அவருக்கு ஃபேர்வெல் போட்டி நடத்துவது பற்றி பிசிசிஐ எதுவும் சொல்லவில்லை. பிசிசிஐ அமைதியால் ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர்.

தோனி எதிர்பார்க்க மாட்டார்
தோனி ஓய்வு முடிவை அறிவித்த போதே ஃபேர்வெல் வேண்டாம் என்ற முடிவில் தான் அறிவித்து இருப்பார். மேலும், ஃபேர்வெல் போன்றவற்றில் அவருக்கு ஆர்வம் இல்லை என்பதை சிலர் சுட்டிக் காட்டவும் தவறவில்லை. தோனி 2014இல் டெஸ்ட் போட்டிகளில் திடீரென ஓய்வு அறிவித்ததை பலரும் சுட்டிக் காட்டி உள்ளனர்.


Click it and Unblock the Notifications