சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூத்த வீரர் தோனி ஓய்வு பெற வேண்டும் என கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்களும் பரவி வரும் நிலையில், கிரிக்கெட் ஜாம்பவானும், பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங் தோனி பற்றி சில அதிரடி கருத்துக்களை கூறியிருக்கிறார்.
தோனியின் விக்கெட் கீப்பிங் மிகவும் சிறப்பாக இருக்கிறது என்பதை சுட்டி காட்டி இருக்கும் அவர், சிஎஸ்கே அணி மிகவும் வெற்றிகரமான அணி எனவும், எப்போதும் சரியான முடிவுகளை எடுக்கும் எனவும் கூறியிருக்கிறார். மேலும் ஐபிஎல் தொடரில் தோனி இன்னமும் ஆபத்தான வீரர் என கூறியிருக்கிறார்.

தோனி குறித்து ரிக்கி பாண்டிங் பேசியதாவது: "தோனியின் விக்கெட் கீப்பிங் இன்னும் மோசமானதாக இல்லை. அந்த ஒரு விஷயம் மட்டும் என்னால் நிச்சயமாக சொல்ல முடியும். அவர் ஸ்டம்புக்கு பின்னே நிற்கும் போது ஸ்பின்னர்கள் வீசும் பந்தை நழுவ விடுவதில்லை. அதுவே அவர் சிறப்பாக விளையாடுகிறார் என்பதை நமக்கு சுட்டிக்காட்டும்."
"மேலும், நாம் இங்கே சிஎஸ்கே அணி எப்படி விளையாடுகிறது என்பதை பற்றி விவாதிக்கவில்லை. அந்த அணி ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்று. நிலையான பயிற்சியாளர்களை வைத்துள்ள அணி, அவர்கள் பொதுவாக சரியான முடிவுகளை எடுப்பார்கள்."
"இப்போது இம்பேக்ட் வீரர் விதி இருக்கும் நிலையில் தோனி மற்ற பேட்ஸ்மேன்களுக்கு பிறகு வந்து விளையாடுவதற்கான உரிமை உள்ளது. அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது பணியை சுருக்கிக் கொண்டு இருக்கிறார் என்பது எனது கணிப்பு. அவர் கடைசி 10 அல்லது 12 பந்துகளில் விளையாட வந்து மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். அந்த வகையில் ஐபிஎல் தொடரில் தோனி ஆபத்தான வீரர் தான்."
"இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் எப்படி போகிறது என்பதை பொறுத்து தோனியின் ஓய்வு முடிவு அமையும் என நினைக்கிறேன். அவர் பேட்டிங்கில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தினால் தொடர்ந்து விளையாடுவார். ஒருவேளை அவரது ஆட்டம் சுமாராக இருந்தால் அவர் நிச்சயம் ஓய்வு குறித்து சிந்திப்பார். அவர் நீண்ட காலமாக அற்புதமாக விளையாடிய ஒரு வீரர்" என்றார் பாண்டிங்.