சென்னை : தோனி ஓய்வு பெற்றதை அடுத்து அவர் குறித்து கவிதை ஒன்றை எழுதி உள்ளார் அவரது ரசிகரும், இளம் கவிஞரும் ஆன ஆனந்த் ரவி.
தோனி 2020 ஐபிஎல் தொடரில் ஆட உள்ளார். அதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள சென்னை வந்த அவர் திடீரென தன் ஓய்வை அறிவித்தார்.

அதை அடுத்து தோனியின் ரசிகர்கள் அவர் குறித்து தங்கள் நினைவலைகளை பகிர்ந்து வந்தனர். அதில் ஒருவர் தான் ஒன்இந்தியா வாசகர் ஆனந்த் ரவி. கவிதைகள் எழுதி வரும் அவர் அதை யூட்யூபிலும் வெளியிட்டு வருகிறார்.
தோனி குறித்து அவர், "தோனியை பிடிக்காதா?" என்ற தலைப்பில் கவிதை எழுதி உள்ளார்.
தோனியை பிடிக்காதா?
எங்களில் ஒருவனாய்.. திங்களின் தலைவனாய்
இந்திய தேசத்தின் மறக்க முடியா மானுடப் பிறவியாய் நீ.. எங்கள் தோனீ
உன்னை எனக்கு அவ்வளவு பிடிப்பதில்லை
ஆனாலும் எழுதாமல் இருக்க முடியவில்லை
உன்னை ஏழ்மையும் விட்டு வைக்கவில்லை
ஏழும் விட்டு வைக்கவில்லை
உன் கடினமான நாட்களெல்லாம் ராஞ்சி நாட்களே
உன் வாழ்வில் பூத்த பூக்களெல்லாம் டிசம்பர் பூக்களே
உன் இரண்டு கரங்களும் கிரிக்கெட்டை வகுப்பதற்கேயன்றி
டிக்கெட்டை கிழிப்பதற்கில்லை
காஞ்சி போன விக்கெட் கீப்பர் பதவியில்
ராஞ்சி போட்ட வேக வித்து நீ
கிரிக்கெட் உலகின் ஸ்டம்பிங் ஜெட் நீ
உன் அமைதி இருப்பும் அழகு சிரிப்பும் பார்ப்பதற்கே நயம்
ஆபத்து நேரத்தில் உன் ஆக்ரோஷம் எதிரணிக்கு உண்டாக்கும் பயம்
உன் பிரிவறிந்த கோப்பை அங்கே முலாம் கண்ணீர் வடிக்கும்
உன் ஹெலிகாப்டர் விந்தை காண கண்கள் ஏங்கித் துடிக்கும்
பீகார் உனக்கு பிறந்த வீடு
சென்னை உந்தன் புகுந்த வீடு
அது உனக்கு உயிர் கொடுத்தது
இது உனக்கு விசில் அடித்தது
பத்ம விருது மட்டுமின்றி உன் திறமைக்கு பரிசுகள் பல
நீ மட்டுமே தமிழ்நாட்டு மக்களின் பாசமிகு ரெண்டாவது தல
குழந்தையோடு விளையாடி குழந்தையானாய்
அணியிலே விளையாடி தலைவனானாய்
ரசிகனோடு விளையாடி மனிதனானாய்
அமைதியான அறிவிப்பு உனக்கென்னவோ எளிமை
உலக ரசிகர்களுக்கோ அது ஒரு கொடுமை
சிங்கத்தின் சீற்றம் என்றும் ஓயாது
ஆம் இந்த மகேந்திர சிங்கத்தின் சீற்றம் ஓயாது
நீல நிற மேகம் துடைத்து
மஞ்சள் நிற சூரியனாய் சீக்கிரம் வா வா