
ஐபிஎல் பயிற்சி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் பங்கேற்க ஐக்கிய அரபு அமீரகம் செல்ல உள்ளது. அதற்கு முன்னதாக சென்னையில் ஆறு நாள் பயிற்சி முகாம் நடத்தி வருகிறது. அதில் பங்கேற்க தோனி, சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட சிஎஸ்கே வீரர்கள் சென்னை வந்து சேர்ந்தனர்.

தோனி ஓய்வு அறிவிப்பு
பயிற்சியில் ஈடுபட்ட தோனி ஆகஸ்ட் 15 அன்று தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தோனியின் அறிவிப்பு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தோனி சென்னையில், அதுவும் சுதந்திர தினத்தில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருள் ஆனது.

தோனி - ரெய்னா பயணம்
தோனி ஓய்வை அறிவித்த சில நிமிடங்களில் ரெய்னாவும் ஓய்வை அறிவித்தார். இருவரும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் தான் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார்கள். தற்போது ஒன்றாக அந்த பயணத்தை முடித்துக் கொண்டதாக ரெய்னா கூறினார்.

திட்டம்
தோனி, சுரேஷ் ரெய்னா இருவரும் அடுத்தடுத்து ஓய்வு அறிவிப்பை வெளியிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருவருமே திட்டமிட்டு தான் ஓய்வு அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார்கள் என்பது பின்னர் ரெய்னா அளித்த பேட்டி மூலம் தெரிய வந்தது.

ஓய்வு அறிவிப்பு
ஆகஸ்ட் 15 இரவு 7.29 மணிக்கு தோனி 16 வார்த்தைகள் கொண்ட இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் தன் 16 வருட சர்வதேச கிரிக்கெட் வாழ்வை முடித்துக் கொண்டார். ரெய்னாவும் சிறிய பதிவில் தன் ஓய்வை அறிவித்தார். அதன் பின் சிஎஸ்கே முகாமில் நடந்தது பற்றி ரெய்னா கூறி உள்ளார்.

என்ன நடந்தது?
தோனி, ரெய்னா ஓய்வு அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்த நிலையில், அதே சமயம் தோனியும், தானும் கட்டி அணைத்து அதிகமாக அழுததாக கூறி உள்ளார் சுரேஷ் ரெய்னா. அதன் பின் சிஎஸ்கே வீரர்களுடன் நேரம் செலவிட்டுள்ளனர்.

சிஎஸ்கே வீரர்களுடன்..
அதன் பின் சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, பியுஷ் சாவ்லா, கேதர் ஜாதவ், தீபக் சாஹர், கரன் சர்மா ஆகியோர் தங்கள் கிரிக்கெட் பயணம் பற்றி பேசி மகிழ்ந்துள்ளனர். இவர்கள் அனைவரும் தோனி ஓய்வு பெறுவது குறித்து முன்பே அறிந்து இருந்ததும், ஒன்றாகவே தனி விமானத்தில் சென்னை வந்ததும் குறிப்பிடத்தக்கது.

இரவில் நடந்த பார்ட்டி
அன்றைய தினம் இரவு சிஎஸ்கே வீரர்கள் பார்ட்டி நடத்தி உள்ளனர். அது பற்றி ரெய்னாவே கூறி உள்ளார். எனினும், அது குறித்த அதிக தகவல்களை அவர் பகிர்ந்து கொள்ளவில்லை. சிஎஸ்கே அணி தன் ட்விட்டர் பக்கத்தில் இந்த அறிவிப்புக்குப் பின் பயிற்சிக்கு வந்த சிஎஸ்கே வீரர்களின் வீடியோவை வெளியிட்டுள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
ஆகஸ்ட் 21 வரை சிஎஸ்கே வீரர்கள் பயிற்சி செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு மாத பயிற்சிக்குப் பின் ஐபிஎல் தொடர் துவங்க உள்ளது. அந்த தொடரில் தோனி, ரெய்னா அதிரடி ஆட்டம் ஆடி சிஎஸ்கே அணிக்கு கோப்பை வென்று கொடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.


Click it and Unblock the Notifications