
ராஞ்சி : இந்திய கிரிக்கெட் அணியில் முன்னாள் கேப்டன் தோனி தான் ஏன் ஒருநாள் போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார் என்ற காரணத்தை கூறியுள்ளார்.
கங்குலி சென்ற பிறகு டிராவிட் கேப்டன் ஆனார். பின் அனில் கும்ப்ளே டெஸ்ட் போட்டிகளில் மட்டும் கேப்டனாக செயல்பட்டார். ஆனால், அவர்களுக்கு சரியான அணி, நேரம் அமையவில்லை. அவர்கள் பல போட்டிகளில் வெற்றியை பெற்றுத் தந்தாலும், அவர்களின் தலைமைப் பொறுப்பு சில காலம் மட்டுமே நீடித்தது.

அடுத்து இந்தியா மோசமான நிலையில் இருந்த போது, டி20 போட்டிகளில் கேப்டன் பதவி ஏற்ற தோனி, 2007 டி20 உலகக்கோப்பையை கைப்பற்றினார். தொடர்ந்து மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் கேப்டன் பதவியை ஏற்றார்.
திடீரென ஒருநாள், ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் இந்தியா சரியாக ஆடாத நிலையில், டெஸ்ட் போட்டிகளில் இருந்து தன் ஓய்வை அறிவித்தார். அதே போல, அடுத்து 2016இல் ஒருநாள் போட்டிகள் கேப்டன் பதவியில் இருந்தும் விலகினார்.
அது ஏன் என இப்போது கூறியுள்ளார். ராஞ்சியில் ஒரு விழாவில் பேசிய போது இதைப் பற்றி கூறியுள்ளார். "எனக்கு அடுத்து வரும் கேப்டன் 2019 உலகக்கோப்பைக்கு அணியை தயார் செய்ய தேவையான நேரத்தை வழங்க வேண்டும் என்பதற்காகவே நான் விலகினேன்" என கூறியுள்ளார்.
தோனி சிறந்த கேப்டன் என்பதற்கு இது ஒன்றே நல்ல உதாரணம்.