2015ல் வம்பிழுத்த வங்கதேச வீரர்கள்.. "நங்குன்னு" ஒன்னு விட்ட தோனி.. அங்கேயே சுருண்டு விழுந்த பவுலர்
மும்பை: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் 40வது பிறந்தநாள் இன்று (ஜுலை.7) கொண்டாடப்பட்டு வருகிறது. எல்லாரும் அவரை கூல் கேப்டன்னு சொல்வாங்க. ஆனால், கோபம் வந்தால் யாருக்கும் தெரியாமல் சைலண்ட்டாக எதிராளியை பஞ்சராக்கிவிடும் வித்தைக்காரர் நம்ம தோனி.
ஆம்! 2015ல் வங்கதேசத்தின் நடந்த போட்டி ஒன்றே அதற்கு சாட்சி. வங்கதேச கிரிக்கெட் வீரர்களிடம் இல்லாத திறமையே கிடையாது. அவர்களது ஒரே மைனஸ் "வாய்" தான். போட்டியில் ஜெயிப்பதற்கு முன்பே கொண்டாடுவது, ஜெயிப்பது போல் இருந்தாலே எதிரணி வீரர்களை வம்பிழுப்பது, வார்த்தை மோதலில் ஈடுபடுவது, நாகினி டான்ஸ் போடுவது என்று தலைகால் புரியாமல் ஆட ஆரம்பித்து விடுவார்கள்.
கடைசியில் ஜெயிக்க வேண்டிய மேட்சை தோற்றுவிட்டு, தேம்பி தேம்பி அழுவதை வாடிக்கையாக வைத்திருப்பார்கள். இதற்கு அவர்கள் ரசிகர்கள் ஏகத்துக்கு முட்டுக் கொடுப்பார்கள்.

பெரும் அதிர்வலை
எத்தனையோ சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், அவர்கள் வரம்பு மீறி செயல்பட்டிருக்கின்றனர். ஆனாலும், அவர்கள் அணுகுமுறையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. சமீபத்தில் கூட, உள்ளூர் போட்டி ஒன்றில், ஷகிப் அல் ஹசன், அம்பயர் மீதிருந்த கோபத்தில் ஸ்டெம்ப்பை பிடுங்கி வீசி எறிந்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால், அந்த அம்பயர், 'எனக்கும் தன்மானம் உள்ளது. இப்படியொரு பிழைப்புக்கு நான் சும்மா இருக்கலாம்" என்று அம்பயர் பணியில் இருந்து ஓய்வுப் பெறப்போவதாக அறிவித்துவிட்டார்.

கடுப்பான ரோஹித்
இப்படியெல்லாம் கூத்தடிக்கும் வங்கதேச அணி, இந்தியன் டீமிடமும் ஓரண்டை இழுத்தது. 2015ம் ஆண்டு வங்கதேசம் சென்றிருந்த இந்திய அணியை அந்த வீரர்கள் வம்பிழுத்தனர். அப்போது நடந்த ஒருநாள் போட்டி ஒன்றில், வங்கதேச பவுலர் முஸ்தாபிசூர் பந்து வீசி விட்டு, பேட்ஸ்மேன் ரன் எடுக்க ஓடி வரும் போதும், அவர்களை தடுக்கும் விதமாக நடுவில் நின்று கொண்டு தொந்தரவு செய்தார். இதன் மூலம், பேட்ஸ்மேன்களை ரன் அவுட் ஆக்குவது என்பது அவர்களது வியூகம். ரோஹித் ஷர்மா ரன் எடுக்க ஓடி வரும் போது, முஸ்தாபிசூர் வந்து நடுவில் நிற்க, கடுப்பான ரோஹித், விரலை நீட்டி அங்கேயே அவரை கண்டித்தார்.

கீழே விழுந்த முஸ்தாபிசூர்
ஆனால், அப்போதும் அடங்காத முஸ்தாபிசூர் மீண்டும் பேட்ஸ்மேன் ரன் ஓடும் போது வந்து குறுக்கே நின்றார். இம்முறை ரன் எடுக்கவந்தது கேப்டன் மகேந்திர சிங் தோனி. ஏற்கனவே வங்கதேச வீரர்கள் அடித்த கூத்தை கவனித்த 'கூல்' தோனி, இவர்களுக்கு அவர்கள் பாணியிலேயே திருப்பி கொடுக்க வேண்டும் என்று, குறுக்கே வந்த முஸ்தாபிசூரை இடித்து கீழே தள்ளினார். தோனியின், ஹேண்ட் பவர், பைசெப்ஸ் பவருக்கு இடித்தால் என்ன ஆவது? துளி கூட பேலன்ஸ் செய்ய முடியாமல் முஸ்தாபிசூர் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார்.

முரட்டுத் தனம்
அதற்கு பின், அவர் தனது வீட்டிற்கு கூட குறுக்குத் தெருவில் போயிருக்க மாட்டார் போல. அப்படியொரு இடி அது. சில நொடிகளுக்கு பிறகே, அவர் 'நான் எங்கிருக்கேன் மோடில்' எழுந்து வந்து அடுத்த பந்தை வீசினார். தோனி இதுபோன்று ஆக்ரோஷமாக நடந்து கொள்வதை பார்ப்பது மிக அரிது. எப்போதும் ஆக்ரோஷம் இருக்கும். ஆனால் அதை வெளியே காட்டாமல் இருப்பது தான் தோனி ஸ்பெஷாலிட்டி. ஆனால், இது போன்று சொல்பேச்சு கேட்கா செல்லங்களுக்கு இப்படி முரட்டுத் தனமா நடந்துகிட்டாதான் புரியும்.


Click it and Unblock the Notifications