மோசமான சூழ்நிலையில் தோனி
டி20 அணியில் இருந்து தோனி நீக்கப்பட்டார் என்ற செய்தியே தோனி ரசிகர்களால் தாங்க முடியவில்லை. இந்நிலையில், அவர் ஒருநாள் போட்டி அணியில் இருந்தும் நீக்கப்படும் மோசமான சூழ்நிலையில் தற்போது இருக்கிறார்.
தோனி ரன் குவிக்கவில்லை
பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து வரும் செய்திகள் இப்படி தான் கூறுகின்றன. இதற்கு என்ன காரணம் என்றால், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் முதல் 3 போட்டிகளிலும், கிடைத்த பேட்டிங் வாய்ப்புகளில் தோனி ரன் குவிக்கவில்லை.
தோனிக்கு வாய்ப்புகள் குறைவு
வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் அடுத்து இரண்டு போட்டிகள் மட்டுமே மீதமுள்ளன. இந்த போட்டிகளிலாவது பெரிய அளவு ரன் குவித்து தன் பார்மை மீட்டுவிட்டதாக நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் தோனி. ஒருவேளை இந்த இரண்டு போட்டிகளிலும் அவர் ரன் குவிக்கவில்லை என்றால், அடுத்து தோனி தன்னை நிரூபிக்க உள்ளூர் போட்டிகளோ, இரண்டு மாதங்களுக்கு வேறு சர்வதேச போட்டிகளோ இல்லை. டி20 அணியில் இருந்தும் நீக்கப்பட்டு விட்டதால் அதில் ரன் குவித்து தன்னை நிரூபிக்கும் வாய்ப்பும் அவருக்கு இல்லை.
ரன் குவிக்கும் கட்டாயத்தில் தோனி
அடுத்து ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர் மட்டுமே உள்ளது. அந்த அணியில் தோனி நீக்கப்பட வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது. ஒருவேளை, ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரிலும் தோனி இடம் பெற முடியாவிட்டால், இந்திய ஒருநாள் அணியில் அவருக்கு மீண்டும் இடம் கிடைப்பது சந்தேகம் தான். எனவே, தோனி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ரன் குவித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
தோனிக்கு பதில் யார்?
தோனிக்கு மாற்றாக தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் தயாராக காத்து இருக்கிறார்கள். ரிஷப் பண்ட் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் ரன் குவிக்கவில்லை என்பதும் ஒரு வகையில் தோனிக்கு சாதகமாகவே இருக்கிறது. ஆனால், தோனியை விட தினேஷ் அல்லது ரிஷப் பண்ட் சிறந்த விக்கெட் கீப்பர்கள் என சொல்லிவிட முடியாது. இது மட்டுமே தோனியின் ஒருநாள் அணி இடத்தை தாங்கிப் பிடித்துக் கொண்டுள்ளது.