லேட்டாக வரும் வீரர்கள்.. தல தோனி தரும் நூதன தண்டனை…! வெளியான புதிய தகவல்
மும்பை:பயிற்சியின் போது வீரர்கள் லேட்டாக வந்தால் அவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்று தோனி கூறியது பற்றி புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.
கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமான கேப்டன்கள் என்ற வரிசையில் தோனிக்கு என்று தனி இடம் உண்டு. காரணம்..... காரியத்தில் மட்டுமே கண்ணாக இருப்பது. அதனால் தான், சர்வதேச அளவில் 3 விதமாக கோப்பைகளை அவரால் இந்தியாவுக்கு பெற்று தர முடிந்தது.
தற்போது அவர் கேப்டன் பதவியில் கிடையாது. ஆனால் எந்த ஈகோவும் பார்க்காமல் கோலி தலைமையில் விளையாடி வருகிறார். தேவைப்படும் நேரங்களில் அணிக்கு உரிய ஐடியாக்களை அவர் வழங்குகிறார். சரியான நேரத்தில் புத்திசாலித்தனமான யோசனையை தோனி வழங்கியதற்கு பல உதாரணங்கள் உண்டு.

புத்திச்சாலி
அவை அனைத்தும் களத்தில் நாம் கண்டிருக்கிறோம். போட்டியை தவிர மற்ற நேரங்களிலும் தோனியின் புத்திசாலித்தனம் எப்படி இருக்கும் என்பதற்கு உதாரணம் ஒன்று இருக்கிறது. அது குறித்த தகவலை வெளியிட்டு இருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் மனவள பயிற்சியாளர் பேடி அப்டன்.

புத்தகத்தில் தகவல்
அவர் எழுதிய தி பார்வுட் கோச் (The Barefoot Coach) என்ற புத்தகத்தில் கடந்த காலங்களில் நடைபெற்ற சுவாரசியமான சம்பவத்தை பதிவிட்டிருக்கிறார். அவர் மேலும் அந்த புத்தகத்தில் குறிப்பிட்டு இருப்பதாவது: அப்போது இந்திய அணியில் 2 விதமான கேப்டன்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தனர்.

வீரர்கள் பயிற்சி
ஒருவர் டெஸ்ட் அணிக்கு, மற்றவர் ஒரு நாள் போட்டி தொடருக்கு. டெஸ்ட் அணியின் கேப்டனாக அனில் கும்ப்ளேவும், ஒருநாள் அணிக்கு கேப்டனாக தோனியும் இருந்த சமயம். வீரர்கள் பயிற்சிக்கு ஒழுங்காக வராமல் காலம் தாழ்த்தி வந்து கொண்டிருந்தனர்.

ரூ.10 ஆயிரம் அபராதம்
இது குறித்து, கேப்டன்களிடம் கூறிய போது, லேட்டாக வருபவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கலாம் என்று கும்ப்ளே கூறினார். ஆனால் தோனியோ, தனி ஒருவருக்கு அல்லாமல், அணியில் உள்ள ஒவ்வொருவருக்கும் 10 ஆயிரம் ரூபாய் விதிக்கலாம் என்றார். அதன்படி அபராத திட்டம் செயல்படுத்தப்பட்டது.

எண்ணிக்கை குறைந்தது
என்ன ஆச்சரியம்.. அதன் பிறகு கால தாமதமாக வருபவர்களின் எண்ணிக்கை குறைய தொடங்கியது. முடிவில் பயிற்சிக்காக யாரும் லேட்டாக வருவது இல்லை என்று அந்த புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications